850 மீட்டர் கடல் ஆழத்தில் சேற்றில் சிக்கியுள்ள டோர்னியர் விமானம்: சிக்னல் வீக்காகிறது
சென்னை: காணாமல்போன டோர்னியர் விமானம் கடலிலுள்ள சேற்று பகுதியில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 8ம் தேதி நாகப்பட்டிணம் கடல் பகுதியிலஇந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் ரக குட்டி விமானம் திடீரென மாயமானது. அதில் பயணித்த மூவர் குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை.
நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி தேடும் பணி நடக்கிறது. இதனிடையே, டோர்னியர் விமான கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைக்க தொடங்கியது. ஆனால், அந்த சிக்னல் விட்டுவிட்டு கிடைக்கிறது.
இதற்கு காரணம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 850 மீட்டர் ஆழத்திலும் தரையில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ள பகுதியில் விமானம் விழுந்துள்ளதுதான் என்று கூறப்படுகிறது.
அந்த பகுதியில், கடலுக்கு அடியில் சேறு சகதி அதிகம் உள்ளது. எனவே, உள்ளே விழுந்த விமானம் சேற்றுக்குள் சிக்கியிருக்கலாம். எனவேதான் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்று விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"சிக்னல் வரும் இடத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தொலைவு வரை கடல் பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். விரைவில் விமானத்தை மீட்டுவிடுவோம்" என்றார் அந்த அதிகாரி.