ஆட்டம் காணும் மதிமுக... தொடரும் நிர்வாகிகள் ஓட்டம்... பொருளாளர் மாசிலாமணி, மா.செ சரவணன் 'ஜூட்'
திண்டிவனம் / மதுரை: மதிமுகவில் இருந்து அக்கட்சியின் பொருளாளர் மாசிலாமணி திடீரென விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணனும் மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். ஒரே நாளில் மதிமுக நிர்வாகிகள் விலகியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மதிமுகவின் மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி இன்று திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறினார்.
2016 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்று திருப்பூர் மாநாட்டில் பொதுச்செயலாளர் வைகோ பேசியது அதிர்ச்சி அளித்தது. மதிமுகவின் முடிவு எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று டாக்டர் மாசிலாமணி கூறியுள்ளார். எதிர்கால அரசியல் பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மதிமுகவில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் விலகியுள்ள நிலையில் மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் விலகியுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைகோ கண்டனம்
இதனிடையே மதிமுகவில் இருந்து ஒன்றிரண்டு பேர் விலகுவதால், கட்சியை யாராலும் அழித்துவிட முடியாது என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறான சலசலப்புக்களால் மதிமுக கவலைப்படப்போவதில்லை என்றும் கூறினார்.
எங்கிருந்தாலும் வாழ்க
சேலம் மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில மகளிர் அணி செயலர் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.எந்தக் கட்சியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அவரவர் உரிமை. சென்ற இடத்தில் அவர்கள் நன்றாக இருக்கட்டும் என்றார்.
அழிக்க முடியாது
மதிமுகவை அழிக்க திமுக முயற்சி செய்கிறது.ஆனால் மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. இது தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்சி,பதவியில் இருக்கும் ஒரு சில பேர் கட்சி மாறுவதால் மதிமுகவை வீழ்த்தி விட முடியாது என்றும் கூறினார்.
மாசிலாமணி விலகல்
வைகோ பேட்டியளித்த சில மணி நேரங்களிலேயே கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகுவாத அறிவித்துள்ளார்.
சரவணன் விலகல்
இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், வைகோ நல்ல தலைவராக இருக்கிறார். ஆனால், கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில் தடுமாறுகிறார். தன்னிச்சையான முடிவு எடுக்கிறார். இதனால்தான் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகல் முடிவை எடுத்தனர். கூட்டணி தொடர்பாக கட்சிக்கூட்டத்தில் யாரும் கருத்தை தெரிவிப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை.
நன்றி மறந்தவர் வைகோ
நான் எழுந்து பேச முற்பட்டபோது, கட்சியில் மூன்று வருடத்திற்கு முன்பு வந்த நீயெல்லாம் பேசக்கூடாது என்று என்னை அவமானப்படுத்தினார் வைகோ. கட்சிக்காக நான் எவ்வளவோ செலவு செய்துள்ளேன். வைகோ அதையெல்லாம் மறந்துவிட்டார். இப்போதைக்கு மதிமுகவில் இருந்து விலகியுள்ளேன். மருத்துவத்துறையில் கவனம் செலுத்து உள்ளேன். இன்னும் 10 நாட்களில் அரசியலில் எனது அடுத்த நிலைப்பாட்டை தெரியப் படுத்துவேன் என்று கூறியுள்ளார் சரவணன்.