விஜயகாந்துடன் சமாதானம் ஆன ராமதாஸ்… தைலாபுரம் தோட்டத்தில் விருந்து?
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரும் 12ஆம் தேதி விருந்து அளிக்க இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜ.க., தெ.ம.தே.க. ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
இந்த கூட்டணியை நவகிரகங்கள் என அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர் அணியினர் வர்ணிக்கின்றனர். அதை பொய்யாக்கும் விதமாக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் இணைந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ராமதாஸ் முரண்டு
இருப்பினும் கூட்டணிக்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் இருந்தே, தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணியில் சேர ராமதாஸ் விரும்பாமல் இருந்துவந்தார். இருப்பினும், அன்புமணியின் விருப்பத்தின்பேரில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்க ராமதாஸ் முன்வந்தார்.
சுதீஷ் – அன்புமணி
ஆனாலும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின்போது, தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி ஏற்பட்டது. சுதீஷ், அன்புமணி ஆகியோரின் முயற்சியில் ஒருவழியாக உடன்பாடு எட்டப்பட்டது.
விஜயகாந்த் பிரசாரம்
தனது கட்சி வேட்பாளர்களுக்காக மட்டுமல்லாது பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வைகோ வீட்டில் விஜயகாந்த்
கடந்த சில தினங்களுக்கு முன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்திற்கு சென்று விஜயகாந்த் சந்தித்தார். மேலும், அவருடன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
ராமதாஸ் பிரசாரம்
தனது மகனுக்காக பிரசாரம் செய்து வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இதுவரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
தேமுதிக மேடையில் ராமதாஸ்
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய விரும்பவில்லை எனவும், குறிப்பாக தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ராமதாஸ் ஆதரவு தெரிவிக்க மாட்டார் எனவும் பல்வேறுவிதமான செய்திகள் உலா வந்தன.
விஜயகாந்து உடன் சமரசம்
இதனிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, தனது வீட்டிற்கு அழைத்து, தனது தந்தை ராமதாசுடன் பேச வைக்க அன்புமணி ராமதாஸ், முயற்சி செய்து வருகிறார்.
விருந்துக்கு அழைப்பு
ஏப்ரல் 12ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் போன்ற பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அப்போது அவர், அன்புமணி ராமதாஸின் அழைப்பை ஏற்று, திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
விஜயகாந்துடன் பிரேமலதா
இந்த விருந்தில் விஜயகாந்த் உடன் அவரது மனைவி பிரேமலதாவும் பங்கேற்பார் என பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
முரசு கொட்ட... மாங்கனி கனிய...
ராமதாசும், விஜயகாந்த்தும் நேரில் சந்தித்து பேசி, ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டால், அது கூட்டணிக்கு புதிய உற்சாகத்தை தரும் என பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சித் தலைவர்களும், எதிர்பார்க்கின்றனர்.
விஜயகாந்த் பாணியில் சொல்லப் போனால் முரசு கொட்ட... கொட்ட... மாங்கனி கனியுமா?