ரஜினி சொன்னதையே நானும் சொல்கிறேன்... ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது- ராமதாஸ்
மதுரை: ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்று அன்று ரஜினிகாந்த் சொன்னார். அதையே நானும் இப்போது சொல்கிறேன். 2016 தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் இந்தத் தமிழகத்தை எத்தனை ஆண்டவன் வந்தாலும், எத்தனை காவடி எடுத்தாலும், பால் குடம் எடுத்தாலும் காப்பாற்ற முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவின் மண்டல மாநாடுகள் வரிசையில் பாண்டிய மண்டல அரசியல் மாநாடு நேற்று இரவு வாடிப்பட்டி பகுதியில் நடைபெற்றது. பல ஆயிரம் பேர் திரண்டு வந்திருந்தனர் இந்தக் கூட்டத்திற்கு.
பெருமளவில் கூட்டம் கூடியதால் உற்சாகத்துடன் காணப்பட்ட டாக்டர் ராமதாஸ் மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதி பிரச்சினைகளை விலாவாரியாகப் பேசினார். அதற்காக பாமக குரல் கொடுத்ததை விளக்கிப் பேசினார்.
டாக்டர் ராமதாஸின் பேச்சிலிருந்து சில
வீரம் செறிந்த மதுரை
வீரம் செறிந்த மண்ணில் பேசிக்கொண்டிருக்கிறேன். கலைஞர், ஜெயலலிதாவைப் போல் நாங்கள் லாவணி பாட விரும்பவில்லை. அப்படிப்பட்ட அரசியல் செய்ய விருப்பமும் இல்லை. அன்புமணி சொன்னதை போல வளர்ச்சிக்கான கண்ணியமான அரசியல் நடத்தவே விரும்புகிறோம்.
யாராவது பேசியிருக்கிறார்களா
2007 ம் ஆண்டிலேயே தமிழகம் 2020 என்ற தொலைநோக்கு திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். அதுபோல் எந்த கட்சியாவது பேசியதுண்டா? எதிர்கால கனவுகள் பற்றி பொறுப்புடன் பல திட்டங்களை வெளியிட்டோம். இதுவல்லவா நல்ல கட்சி.
வறுமையும், வளமும்
நாட்டில் ஒருபுறம் வறுமை வாட்டுகிறது. மறுபுறம் வளம் கொழிக்கிறது. இதற்கு தமிழகம் விதிவிலக்கல்ல. 2020 ல் வறுமையை ஒழித்து செழிப்பான தமிழகமாக மாற்றிக் காட்டுவோம் என கூறினோம். 2016ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவோம்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
திமுகவுக்கும் அதிமுகவிற்கும் வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் கூறினார். அவைகளை தூக்கி எறியுங்கள்.
50 வருடமாக அவர்கள் ஆண்டது போதும்
கடந்த 50 வருடமாக அவர்களையே ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்தீர்கள். தமிழகம் கண்ட பலன் என்ன. எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
ரஜினி சொன்னாரே அன்று
1996ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று ரஜினி சொன்னார். அதேயே சோவும் வலியுறுத்தினார். அதையே நானும் சொல்கிறேன்.
எத்தனை ஆண்டவன் வந்தாலும்,
இனியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் எத்தனை ஆண்டவன் வந்தாலும், காவடி எடுத்தாலும், பால் குடம் எடுத்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. அன்புமணி அமைக்கும் அரசு மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சியாக இருக்கும், எனவேதான் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் நல்லாட்சிதர ஆதரவு தாருங்கள்.
சினிமாக்காரர்களுக்கு இடமில்லை
என்னிடம் சினிமாக்காரர்கள் யாராவது கட்சியில் சேரவேண்டும் என்று வந்தால் அவரை சேர்க்க மாட்டோம் என்று தான் சொல்வேன். ஏனென்றால் இது மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி. அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சி என பெயர் வைத்துள்ளோம் என்றார் ராமதாஸ்.