தந்தை பெரியார் பார்வையில் காதல் என்றால் என்ன?
காதல் என்றால் என்ன? என்பதை 74 ஆண்டுகளுக்கு முன்பே 01.01.1942 அன்று பதிப்பிக்கப்பட்ட ''பெண் ஏன் அடிமை ஆனாள்?'' என்ற கட்டுரைத் தொகுப்பில் 'காதல்' என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் தந்தை பெரியார் வரையறுத்திருக்கிறார்.
''அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர, வேறு பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் ------ பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் & -பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல், தொல்லைபடுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.---
ஆனால், காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்ததெந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைகின்றது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும்,(காதலை) அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.''
அதுமட்டுமின்றி, காதல் தெய்வீகமானது அல்ல... அது ஆசை மற்றும் செல்வத்தை பொறுத்தே ஏற்படும் என்பதையும் 30.06.1940 அன்று வெளியான குடியரசு நாளிதழில் பெரியார் கூறியிருக்கிறார்.
''என்னைப் பொறுத்தவரையில் காதல் என்பது பொருளற்ற வார்த்தை என்பேன். அதற்குப் பொருள் ஏதாவது இருக்கிறது என்று சொன்னால், அது ஆசை அல்லது தேவை என்பதைத் தவிர வேறு அல்ல என்பேன். அந்த ஆசையும் தேவையும் வியாபாரம் போல் இலாபத்தை - நலத்தைப் பொறுத்ததே தவிர, அதில் தெய்வீகமோ அற்புதமோ ஏதும் கிடையாது. இலாபமுள்ள இடத்தில்தான் ஆசை அல்லது காதலும் தேவையும் இருக்கும். இலாபமில்லாத இடத்தில் இவற்றிற்கு வேலை இல்லை.
...அழகும் செல்வமும் உள்ளவன் என்று கருதும் போது ஏற்பட்ட காதல் அவை இரண்டும் இல்லை என்று தெரிந்தபின்னும் இருக்காது. அதுபோல தனது இயற்கை இச்சையைத் தீர்க்கத்தக்க வீரன் என்று கருதியபோது ஏற்பட்ட காதல், அவன் வீரமற்றவன் என்று தெரிந்த போது இருக்காது. ஆதலால், காதல் என்பது பயனை எதிர்பார்த்தும், தனது திருப்தியை எதிர்பார்த்தும் தானே ஒழிய, எப்போதும் யாதொரு பயனும் எதிர்பாராமலும் இருக்கவேண்டியது என்பதானதல்ல.'' இது தான் காதல் குறித்த தந்தை பெரியாரின் பார்வையாக இருந்திருக்கிறது. இது தான் நிகழ்கால யதார்த்தமும், உண்மையும் கூட.
காதல் மற்றும் அதன்மூலம் ஏற்படும் கலப்புத் திருமணங்களால் சாதி ஒழிந்து விடும் என்று ஒரு பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. ஆனால், காதலாலும், கலப்புத் திருமணத்தாலும் சாதிகள் ஒழிவதில்லை என்பது தான் உண்மை. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது? காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களில் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்? என்ற எளிய வினாக்களுக்கு பல ஆண்டுகளாக விடை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும் விடை கிடைக்கவில்லை. காரணம்... காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 99 விழுக்காட்டினர் தந்தையின் சாதியையே குழந்தையின் சாதியாக பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.