ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம்.. லண்டன் கிளம்பினார் டாக்டர் ரிச்சர்ட்
சென்னை: ஜெயலலிதாவின் உடல் நிலை முன்னேற்றம் கண்டு வருவதால் லண்டனில் இருந்து அப்போலோவிற்கு வந்து சிகிச்சை அளித்த டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
கடந்த மாதம் 22ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவின் காரணமாக எழுந்த உடல் நலக் கோளாறு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு நுரையீரல் தொற்று இருப்பதாக பின்னர் கூறப்பட்டது. இதற்கான மருத்துவ சிகிச்சையை அப்போலோ மருத்துவமனை அளித்து வருகிறது.

என்றாலும், நுரையீரல் தொற்றுக்கான பிரத்யேக சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே கடந்த 30ம் தேதி வரவழைக்கப்பட்டார். பின்னர், லண்டனுக்கே திரும்பிவிட்ட நிலையில் மீண்டும் அப்போலோவிற்கு வரவழைக்கப்பட்டார். கடந்த 14ம் தேதியில் இருந்து அவர்தான் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இதனிடையே சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபிஸ்டுகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தற்போது ஜெயலலிதாவிற்கு உரிய சிகிச்சையை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே லண்டனுக்கு புறப்பட்டார். அவருடைய அறிவுறுத்தலின் பேரில் சிங்கப்பூரில் இருந்து அப்போலோவிற்கு வந்துள்ள பிசியோதெரபிஸ்டுகள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனையடுத்து, டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவர்களும் டெல்லிக்கு திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications