"நெய்வேலி"யை நீக்கிவிட்டு என்.எல்.சி என பெயர் மாற்றம்... தார்பூசி அழிக்கப் போவதாக வீரமணி அறிவிப்பு
நெய்வேலி: என்.எல்.சி. நிறுவனத்தின் பெயரில் உள்ள நெய்வேலி என்பதை அகற்றி என்.எல்.சி.இண்டியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து புதிய பெயரைத் தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.
குறிஞ்சிப்பாடி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற திராவிடர் கழகத்தார் கலந்துரையாடல் கூட்டத்தில் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டார் வீரமணி.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயரிலிருந்து (என்.எல்.சி. நெய்வேலி என்ற பெயரை) நெய்வேலியை நீக்கிவிட்டு என்.எல்.சி. இண்டியா லிமிடெட் என்ற பெயரை மத்திய அரசு சூட்டியிருக்கிறது.
இந்தத் தகவல் தெரிந்த அடுத்த நிமிடமே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தோம். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது உலகம் அறிந்த பெயர் - தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பெயர் - அதனை நீக்கக்கூடாது. அப்படி நீக்கினால், வரும் 22 ஆம் தேதியன்று என்.எல்.சி. முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அறிவித்தோம். அதன்படி வரும் 22 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவும் உள்ளது.
இரவோடு இரவாக என்.எல்.சி. பெயரை நீக்கிவிட்டு, என்.எல்.சி. இண்டியா லிமிடெட் என்ற பெயர்ப் பலகையை வைத்துள்ளனர். இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்க மறுக்கும் மத்திய அரசின் ஒரு சார்பு ஆணவப் போக்காகும். எங்களின் அடுத்த கட்டப் போராட்டம் - தந்தை பெரியார் எங்கள் கையில் கொடுத்த தார்ச் சட்டியும், பிரஷும் தயாராகவே இருக்கிறது. இதுமுதற் கட்டம். அடுத்தகட்டமாக தார்கொண்டு அழிக்கும் போராட்டத்தை நடத்துவோம்.
ரயில்வே நிலையங்களில் ஊர்ப் பெயர்கள் முதல் இடத்தில் இந்தி இடம் பெற்றபோது தந்தை பெரியார் போர் முரசு கொட்டினார். ரயில்வே நிலையங்களில் இருந்த இந்தி எழுத்துகளைத் தார் கொண்டு அழித்தோம் - முடிவில் நாங்கள் வெற்றிதான் பெற்றோம்! ரயில் நிலையங்களில் இப்பொழுதும் நீங்கள் பார்க்கலாம்; தமிழ் முதலிடத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. எடுத்த காரியத்தில் வெற்றி பெறாமல் ஓயமாட்டோம்.
நெய்வேலியிலும் அந்த நிலை ஏற்பட்டே தீரும். அன்றைக்கு எங்கள் வயது முதிர்ந்த தோழர்கள் மேசையைப் போட்டு அதன்மீது ஏறி நின்று, இந்தி எழுத்துகளைத் தார் கொண்டு அழித்தனர்.
இப்பொழுது இளைஞர்கள் ஏராளம் இருக்கிறார்கள். தங்களுக்குள்ளேயே ஒருவர் தோளில் இனொருவர் ஏறி நின்று என்.எல்.சி.இண்டியாலிமிடெட் என்ற பெயரினை தார் கொண்டு அழித்தே தீருவார்கள். அந்தப்போராட்டத்திற்கு இடம் அளிக்காமல், மத்திய அரசு நடந்துகொண்டால் நல்லது. இல்லையெனில், எங்கள்போராட்டம் உறுதி !வெற்றியும் உறுதி!! இது ஒரு கட்சிப் போராட்டமல்ல - ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களின் உணர்வுப்பூர்வமான போராட்டம் என்றார்.