கோவையை கலக்கும் பைக் டாக்சி... டூவிலருக்கு டிரைவர்.. கி.மீக்கு ரூ. 3தான் கட்டணம்!
கோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
கோவை: கோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய போக்குவரத்து நெரிசலில் விரைவில் செல்லும் வகையில் கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் கட்டணத்தில் கோவையில் முதல் முறையாக பைக் டேக்சியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரை மையமாக கொண்டு ராப்பிடோ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முதல் முறையாக கோவையில் பைக் டேக்சியை அறிமுகம் செய்து உள்ளது.
ஓலா மற்றும் ஊபர் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு செயலி தான் இந்த டேக்சிக்கும் பயன்படுத்தும்படி செய்து உள்ளனர். நமது கைபேசியில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, நாம் இருக்கும் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் அவர்களே டூவீலரில் வந்து நம்மை அழைத்து செல்கின்றனர்.
வண்டி ஓட்டுனர் "கேப்டன்"
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் சிறிதாக துவங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது 16 மாநகரங்களில் செயல்பட்டு வருகின்றது. இது தமிழகத்தில் தற்போது கோவை, திருச்சி மற்றும் மதுரையிலும் செயல்பட்டு வருகின்றது. ராப்பிடோ நிறுவனம் கோவையில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களே ஆகின்றன. வண்டி ஓட்டுனரை கேப்டன் என்று அழைப்பது வழக்கம். இங்கு 28 ஆண் கேப்டன்களும், இரண்டு பெண் கேப்டன்களும் பணிபுரிந்து தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.
கிலோ மீட்டருக்கு 3 ரூபாய்
ஒரு கிலோ மீட்டருக்கு மூன்று ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதனால் யார் வேண்டுமானாலும் இதனை சுலபமாக பயன்படுத்த முடிகிறது . சராசரியாக கோவையில் ஒரு நாளைக்கு 200 முதல் 300 நபர்கள் ராப்பிடோ ஆப் மூலம் பயணம் செய்து வருவதாக கூறுகின்றனர் . இதுமட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தலைக்கவசமும்,ஹேர் நெட்டும் வழங்கப்படுகிறது.மேலும் ராப்பிடோவில் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் விபத்துகாப்பீடு வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் போன் கட்டாயம்
ஓட்டுனரை கண்காணிக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் அவர்கள் செல்லும் இடத்தினை டிராக் செய்யவும் முடியும். ராப்பிடோவில் கேப்டனாக இணைய ஓட்டுனர் உரிமம், சட்டப்படியான ஆவணங்கள் மட்டும் போதுமானது. ஆனால் வண்டி மட்டும் 2007 க்கு பிறகு வந்த வண்டியாக இருக்க வேண்டும். மேலும் ஆண்ட்ராய்ட் போன் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது ராப்பிடோ நிறுவனத்தின் விதிமுறைகள் ஆகும். பயணிகளிடமிருந்து பெறும் பணத்தை கேப்டன்களே வைத்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி பல ஊக்கத்தொகை கேப்டன்களுக்கு வழங்கப்படுகிறது.ராப்பிடோவிற்கு பயணிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேரங்களில் முன்பதிவு செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார்.
பெரும் வரவேற்பு
தற்போது உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உச்சத்தை அடைந்து வரும் நிலையில் இந்த டேக்சி பல மக்களின் குடும்ப செலவை சற்றே குறைக்கும் வகையிலேயே உள்ளது. மேலும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் இந்த நிறுவனம் வழங்கி உள்ளது. இதனால் கோவை மக்கள் பெரும் மகிழ்ச்சியினில் உள்ளனர். இந்த புதிய அறிமுக திட்டத்திற்கு அவர்கள் வரவேற்பினையும் அளித்துள்ளனர்.