சென்னையில் வறட்சிதான்... உள்மாவட்டங்களில்தான் மழை - வானிலை மையம்
சென்னையில் வறண்டவானிலையே நிலவும் என்றும், உள் மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் வரும் நாட்களில் வறண்ட வானிலையே தொடரும் எனவும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் காலை முதலே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் தேவதானபட்டி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதே போல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை, கடலூர் மாவட்டங்களிலும் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மற்றும் மன்னார் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தென் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தண்ணீர் பஞ்சம் தீரும் என்று பொதுமக்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் கடலோரம் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வரும் நாட்களில் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வரும் நாட்களில் வறண்ட வானிலையே தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.