தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் மாஃபா பாண்டியராஜன் கைதாக வாய்ப்பு? - முன்ஜாமீன் மனு
தேசியக்கொடியை அவமதித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மாஃபா. பாண்டியராஜன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்தில் தேசியக்கொடியை பயன்படுத்தி அவமதித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மாஃபா. பாண்டியராஜன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக அவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதாவின் சவப் பெட்டியின் மாதிரியை காண்பித்து ஓபிஎஸ் அணியினர் பிரசாரம் செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக பாண்டியராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. அப்போது பிரச்சாரம் செய்த டாக்டர் அழகு தமிழ் செல்வி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவப்பெட்டி பிரச்சாரம்
ஆர்கே நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது. ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சியின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.
தேசியக்கொடி
ஜெயலலிதா போன்று உருவத்தில் மெழுகு பொம்மை, சவப்பெட்டி செய்து அதன் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. இதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே தேசியக்கொடியை நீக்கினர்.
ரூ.6.5 லட்சம் செலவு
இந்நிலையில் அந்த மெழுகு பொம்மையை யார் தயார் செய்தது? அதற்கான பணத்தை யார் கொடுத்தது என்று பொம்மை செய்த நபரிடம் செலவின கணக்கு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சவப்பெட்டியுடன் அந்த பொம்மை செய்ய ரூ.6.5 லட்சம் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஃபா பாண்டியராஜன்
கடும் கண்டனத்தைத் தொடர்ந்து சவப்பெட்டியை வைத்து பிரச்சாரம் செய்ததற்கு ஓபிஎஸ் அணியினர் மன்னிப்பு கோரி இருந்தனர். அந்த பிரச்சாரத்தில் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மாஃபா. பாண்டியராஜன் ஈடுபட்டிருந்தார்.
வழக்குப்பதிவு
இதையடுத்து, அவர் உள்பட அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேசியக் கொடியை வைத்து பிரச்சாரம் செய்ததற்காக, மாஃபா பாண்டியராஜன், டாக்டர் அழகுத்தமிழ் செல்வி உள்ளிட்ட பன்னீர்செல்வம் அணியினர் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதாக வாய்ப்பு
இந்த வழக்கில் மாஃபா பாண்டியராஜன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.