2 வியாபாரிகளிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உரிய ஆவணம் இன்றி வியாபாரிகள் கொண்டு சென்ற ரூ. 7 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் சந்திப்பு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் வேலுமயில் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நாலாட்டின்புதூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த துடைப்பம் வியாபாரி ஜீவா கண்ணன் என்பவரை பறக்கும்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
பைக்கில் அவர் ரூ.4 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜீவாவிடம் விசாரித்த போது சொந்தமாக வீடு கட்டி வருவதாகவும் அதன் பொருட்டு கழுகுமலையில் உள்ள தனது சகோதரரிடம் இருந்து பணத்தை வாங்கி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரிடம் உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் பறக்கும்படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கோவில்பட்டி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இதே போன்று தமிழக-கேரள எல்லையான புளியரை அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து வேகமாக வந்த மினி லாரியை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 700 இருந்தது.
விசாரணையில் செங்கோட்டை அருகே மேக்கரையில் கிழங்கு வாங்க இப்பணத்தை கொண்டு வந்ததாக கேரளாவை சேர்ந்த கிழங்கு வியாபாரி ராய் தெரிவித்தார். இதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் பணத்தை செங்கோட்டை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.