துபாயில் பதுங்கியுள்ள 'டான்' ஸ்ரீதரின் ரூ.150 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்க துறை அதிரடி
சென்னை: பல்வேறு குற்றச்சாட்டின் தேடப்பட்டு வரும் குற்றவாளியான காஞ்சிபுரம் தனபாலன் ஸ்ரீதர் என்பவரி்ன் ரூ.150 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கம் செய்துள்ளது. இதனால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தனபாலன் ஸ்ரீதர் என்றால் சென்னையில் அவரது குடும்பத்தைத் தாண்டி யாருக்குமே தெரியாது.. ஆனால் டான் ஸ்ரீதர் என்றால் ஒட்டு மொத்த டான் கூட்டங்களுக்கும் ரொம்ப நன்றாகத் தெரியுமாம். இவர் மீது 7 கொலை உள்பட 43 வழக்குகள் இருக்கிறதாம்.
சோட்டா ராஜன் பெயரைக் கேட்டாலே பலருக்கு மும்பையில் டரியல் ஆகும். ஆனால் இந்த ஸ்ரீதர் ஒரு ரியல் டான்.. அதாவது ரியல் எஸ்டேட் டான் பாஸ். ரியல் எஸ்டேட் மட்டும்தான் இவரது ரகளை ஏரியா. இவரை தமிழகத்தின் தாவூத் என்று செல்லமாக கூப்பிடுகிறார்கள்.. ஆமாங்க, தமிழக போலீஸே அப்படித்தான் கூப்பிடுது.
தமிழக காவல்துறையால் அதிகம் தேடப்படும் நபராம் இவர். இவரும் துபாயில்தான் பதுங்கியுள்ளார். துபாயில் பதுங்கியிருந்து கொண்டே தன்னுடைய ஆட்கள் மூலம் சென்னைக்கு அருகே ரூ. 500 கோடி மதிப்பிலான ரியல் எஸ்டேட் ரவுடித்தனத்தை செயல்படுத்தி வருகிறார். பல வருடமாக தலைமறைவாகவும் இருக்கிறார்.
இந்நிலையில், தனபாலன் ஸ்ரீதரின் 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 4 பங்களாக்கள் பல நூறு ஏக்கர் நிலம் உள்ளிட்டவற்றை முடக்கம் செய்துள்ளதால் ஸ்ரீதருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கறுப்புண பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பல்வேறு நபர்களை மிரட்டி சொத்துக்களை அபகரித்தது உட்பட பல்வேறு வழக்குகள் ஸ்ரீதர் மீது உள்ள நிலையில் தற்போது அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் துபாயில் பதுங்கியுள்ள அவரை இந்தியா கொண்டு வரவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.