இணைப்பு பேச்சு: தினகரன் தரப்பு கறாராக முன்வைக்கும் 3 கோரிக்கைகள்... எடப்பாடியார் தரப்பு 'ஷாக்'
இணைப்பு பேச்சுவார்த்தைக்காக தினகரன் தரப்பு முன்வைக்கும் 3 கோரிக்கைகளால் எடப்பாடியார் தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம்.
சென்னை: தூக்கிய போர்க்கொடியை வெள்ளைக்கொடியாக்க தினகரன் தரப்பு முன்வைக்கும் 3 கோரிக்கைகளால் முதல்வர் எடப்பாடியார் தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
தினகரன் தரப்புக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை உறுதி செய்து கொண்ட டெல்லி இணைப்புக்காக சென்னை பிரமுகர் மூலமாக பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் தினகரன் கறப்பு 3 கோரிக்கைகளை கறாராக முன்வைத்துள்ளதாம்.
அதாவது, தற்போதைய அமைச்சர்கள் 11 பேரை நீக்கிவிட்டு நாங்கள் சொல்கிற நபர்களுக்குத்தான் அமைச்சர் பதவி; முதல்வர் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்; அதிமுக கட்சியும் எங்கள் வசம் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கைகள். டெல்லியின் பிரதிநிதியாக சென்னை பிரமுகர் பேசுவதால் எடப்பாடியார் தரப்பு எதுவும் மறுப்பு பேசாமல் மவுனமாக இருந்து வருகிறதாம்.
11 அமைச்சர்களுக்கு குறி
தினகரன் தரப்பு வலியுறுத்துவதைப் போல 11 அமைச்சர்களை நீக்கிவிட்டால் ஆட்சி கவிழ்வது நிச்சயம் உறுதி. ஏனெனில் அந்த அமைச்சர்களின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்னொரு பக்கம் போர்க்கொடி தூக்குவார்கள்.. அதனால் ஆட்சியே இல்லாமல் போய்விடும் என்பது எடப்பாடியார் தரப்பு வாதம்.
கட்சி இருந்தால் போதும்
ஆனால் தினகரன் தரப்போ, எங்களுக்கு ஆட்சியை விட கட்சிதான் முக்கியம். அதிமுக என்கிற கட்சி எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலே போதும். ஆட்சி எங்களுக்கு இப்போதைக்கு முக்கியமே இல்லை என்கிறதாம். இப்படி பேச்சுவார்த்தை நடப்பதை தெரிந்து கொண்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இப்போது தினகரன் பக்கம் சாய தொடங்கிவிட்டனராம்.
பல்ஸ் பார்த்த சீனியர்
ஓபிஎஸ் அணியில் நிச்சயம் தமக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைத்த சீனியரும் பல்ஸ் பார்த்திருக்கிறார். ஆனால் உங்க ஆதரவுக்கு நன்றி.. ஆனால் இப்ப வீட்டுக்கு வந்தீங்கன்னா பதவிக்காக வந்தீங்கன்னு உங்களுக்குத்தான் கெட்ட பெயர் வரும். அமைதியாக இருங்க.. நிச்சயம் உங்களுக்கு எதிர்பார்க்கிறது கிடைக்கும் என தெம்பூட்டியிருக்கிறார்களாம்.
திமுக நிராகரிப்பு
இதனிடையே தினகரனும் ஸ்டாலினும் கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாக டெல்லி சட்டாம்பிள்ளை இன்னொரு பக்கம் பேசிவருகிறார். இது தொடர்பாக திமுகவில் நடத்தப்பட்ட ஆலோசனையில், அப்படி ஒரு செய்தி பரப்புவது என்பதே தினகரன் தரப்பு தமக்கான பேரத்தை வலுவாக்கிக் கொள்ளத்தான்... அவர்களாவது நம்மோடு கை கோர்ப்பதாவது.. அவர்களை எல்லாம் நம்பவே முடியாது என திடமான முடிவெடுத்திருக்கிறார்களாம்.