அந்தப் பயம் இருக்கனும்.. ஸ்டாலினை அரை மணி நேரத்தில் கைது செய்ய என்ன காரணம் தெரியுமா?
சென்னை: மெரினாவில் உண்ணாவிரதம் அமர்ந்த அரை மணி நேரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் மைய புள்ளியாக இருந்தது மெரினா கடற்கரை. அந்த போராட்டம் மாநிலம் முழுக்க, பரவி அரசுக்கு எதிராக பெரும் போராட்டமாக வெடித்தது.

இந்நிலையில், சட்டசபையிலிருந்து இன்று ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். ஸ்டாலின் சட்டை கிழிந்திருந்தது. போலீசாரின் பூட்ஸ் கால்களால் தான் தாக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபை அமளி குறித்து புகார் செய்த ஸ்டாலின் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் மெரினா கடற்கரைக்கு பயணித்தார். அங்குள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனடியாக சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் திமுகவினர் மெரினா நோக்கி விரைந்தனர்.
திமுக ஆதரவு ஊடகங்கள், தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் தெருவிற்கு வந்ததை போல, சட்டசபையில் நடந்த அடிதடிக்கு எதிராகவும் மக்கள் வெளியே வர வேண்டும் என்று, அழைப்பு விடுத்தன.

மாநிலம் முழுக்க ஆங்காங்கு திமுகவினர் எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்தனர். வன்முறை வெடித்தது. எனவே, போராட்டம் பரவும் என்று அஞ்சியது எடப்பாடி பழனிச்சாமி. மற்றொரு ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்துவிடுமோ, இதை காரணமாக வைத்து ஆட்சி கலைந்துவிடுமோ என்ற நடுக்கத்தால், அரை மணி நேரத்தில் ஸ்டாலினை கைது செய்ய உத்தரவு பறந்தது.
ஸ்டாலின் மற்றும் அவருடன் இருந்த போராட்டக்காரர்கள், எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டு சமூக கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஆளும் வர்க்கத்திற்கு ஒரு அச்சத்தை எப்போதும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. ஸ்டாலின் போராட்ட களமாக மெரினாவை தேர்ந்தெடுக்க காரணமும் அதுதானே.












Click it and Unblock the Notifications