சிலுவம்பாளையம் டூ செயின்ட்ஜார்ஜ் கோட்டை வரை..."எடப்பாடி"யின் பயணம்!
தமிழகத்தின் 13வது முதல்வராக பதவியேற்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் பிறந்து முதல்வராக உயர்ந்துள்ளார்.
சேலம்: எடப்பாடி பழனிச்சாமி இளம் வயதில் அதிமுகவில் இணைந்து செங்கோட்டையின் மூலம் அரசியல் பாடம் கற்று இன்று முதல்வராக உயர்ந்துள்ளார். சேலம் மாவட்ட சிலுவம்பாளையத்தில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்து முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் பயணத்தை தெரிந்து கொள்வோம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 62 வயதாகிறது. சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம். தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தாயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார் பி.இ. படித்து உள்ளார்.
சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்பகவுண்டர்-தவுசாயம்மாள் தம்பதியரின் கடைக்குட்டியாக பிறந்தவர் தான் பழனிச்சாமி. தான் விவசாயியாக இருந்தாலும் மகன் பழனிச்சாமியை படிக்க வைத்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு வர தந்தை ஆசைப்பட்டார். ஆனால் பழனிச்சாமி ஆசைப்பட்டது அரசியல்வாதியாகவேண்டும் என்பதுதான். எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவரது பெயருடன் தொகுதியின் பெயரும் ஒட்டிக்கொண்டது.
அரசியலில் பழனிச்சாமி
1983ம் ஆண்டில் அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தவர், மெல்ல மெல்ல சிலுவம்பாளையம் கிளைச்செயலாளராக உயர்ந்தார். 1986ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிலுவம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டு, டெபாசிட்டை பறி கொடுத்தார்.
ஜெ.,அணியில் பழனிச்சாமி
1983ம் ஆண்டில் அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தவர், மெல்ல மெல்ல சிலுவம்பாளையம் கிளைச்செயலாளராக உயர்ந்தார். 1986ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிலுவம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டு, டெபாசிட்டை பறி கொடுத்தார்.
ஜெ.,அணியில் பழனிச்சாமி
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1987ல் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா அணியில் சேர்ந்தார்.அப்போது செல்வாக்காக இருந்த செங்கோட்டையனின் அறிமுகமும், ஜாதி பாசமும் இணைந்து எடப்பாடி தொகுதியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை ஏற்படுத்தியது.
1989 டூ 2016
1989 சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தார். அதே செங்கோட்டையனின் ஆசியுடன் மீண்டும் 1991 சட்டசபைத் தேர்தலில் எடப்பாடியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்எல்ஏவானார். எடப்பாடி சட்டசபை தொகுதியின் சட்டசபை உறுப்பினராக 1989-1991, 1991-1996, 2011 -2016, மற்றும் 2016 முதல் தற்போது வரை பதவியில் உள்ளார். டான்செம் தலைவர், மாவட்ட ஆவின் சேர்மன், அறங்காவலர் தேர்வுக்குழு தலைவர் என அடுத்தடுத்து பதவிகள் பெற்றார்.
ஏற்ற இறக்கங்கள்
1996ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். 2001ல் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எடப்பாடி தொகுதி சென்றது. 1998ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 99, 2004ல் திருச்செங்கோடு லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தார். 2006 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் எடப்பாடியில் வாய்ப்பு கிடைத்தும் தோல்வியடைந்தார்.
2011ல் அமைச்சரான பழனிச்சாமி
ராவணனின் ஆசியால் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரானார். மீண்டும் 2011ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் சீட்டும் வாங்கி வெற்றியும் பெற்றார். தினசரி கோடிகள் புழங்கும் நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சராக மாறி விட அருகில் இருந்தவர்களே எட்டி நின்று வியந்து பார்க்கும் நிலைக்கு உயர்ந்தார் பழனிச்சாமி.
ஜெயலலிதாவின் ஐவரணி
ஜெயலலிதா கடந்த ஆட்சிகாலத்தில் உருவாக்கிய ஐவரணியில் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய பங்கு வகித்தார். 2016ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரானார். ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதே அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று அடிபட்டது. ஆனால் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஒ.பன்னீர் செல்வம் முதல்வரானார்.
சசிகலா அணி
ஓபிஎஸ் இடையேயான பதவி சண்டையில் இரு அணிகளாக அதிமுக உடைந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சசிகலாவின் முதல்வர் ஆசையை அஸ்தமனமாக்கியது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவிக்கு முன் மொழிந்தார் சசிகலா. இதனையடுத்து எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்தனர். ஆளுநரை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர்.
முதல்வராக பதவியேற்பு
முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்னும் 15 நாட்களில் அவரது பெரும்பன்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார். 2016ல் முதலில் பொதுப் பணித்துறை அமைச்சராக பதவியேற்ற இவர் தற்போது முதல்வராகியுள்ளதால் நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட துறைகளும் கூடுதலாக இணைந்துள்ளன. பொதுப்பணித்துறையை கூடுதலாக கவனிக்க உள்ளார்.
அமைச்சர் டூ முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதியைப் போல தற்போதய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைப் போல பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து முதல்வராக பதவியேற்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. கொங்கு மண்டலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் முதல்வராவது இதுதான் முதல் முறையாகும். திடீர் முதல்வராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு எப்படி இருக்கும்? பெரும்பான்மையை நிரூபிப்பாரா? பொருத்திருந்து பார்க்கலாம்.