அதிமுக புதிய தலைவராக உருவெடுக்கும் எடப்பாடி- ஆடிட்டர் ஆசியுடன் சசி குடும்பத்துக்கு எதிராக சடுகுடு!
சசிகலா குடும்பத்தை எதிர்த்து அதிமுகவின் புதிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுக்க காரணமே அந்த ஆடிட்டர்தானாம்.
சென்னை: சசிகலா குடும்பத்தை துணிச்சலுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பதற்கும் அதிமுகவின் வலிமையான ஒரு தலைவராக உருவெடுக்க முயற்சிப்பதற்கும் காரணமே டெல்லிக்கு நெருக்கமான ஆடிட்டர்தான் என கூறப்படுகிறது.
சட்டசபை கட்சித் தலைவராக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவால், முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிட்டது சசிகலா.
இதனால் எடப்பாடி முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார். இந்த அரசியல் ஆட்டத்தின் முக்கிய மூளையாக பக்கத்து மாநிலத்து ஆளுநர் இருந்தார் என்ற தகவலும் வலம் வந்தது.
தினகரன் சகாப்தம்
இதன்பின்னர், அசைக்க முடியாத தலைவராக தினகரன் உருவெடுத்துக் கொண்டிருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் அதுவும் முடிவுக்கு வந்தது.
தனிக்காட்டு ராஜா
இப்போது எடப்பாடி பழனிச்சாமி தனிக்காட்டு ராஜாவாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தை ஓரம்கட்டிவிட்டு அதிமுகவையும் ஆட்சியையும் முழுவதும் தம் வசமாக்குவதில் முனைப்புடன் இருக்கிறார்.
ஆடிட்டர் ஆலோசனைகள்
இதற்கு முக்கிய காரணம் அந்த ஆடிட்டரின் ஆலோசனைகள்தானாம். இந்த ஆடிட்டர்தான் முன்பு ஓபிஎஸ்-க்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
ஓபிஎஸ்
முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டாம் என ஓபிஎஸ்ஸை அவர் தடுத்துப் பார்த்தார். ஆனால் சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்.
Recommended Video
செல்லப்பிள்ளையான எடப்பாடி
இதில் அந்த ஆடிட்டர் தரப்பு ரொம்பவே அப்செட் ஆனதாம். எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில் தினகரனிடம் இருந்து அவரைப் பிரிக்கும் வேலைகள் தீவிரமடைந்தன. சேகர் ரெட்டி விவகாரம் விஸ்வரூபமெடுக்க, பா.ஜ.க சொல்வதைக் கேட்டு நடக்கும் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார் எடப்பாடி.
எடப்பாடியே பெட்டர்
அவருடைய விசுவாசத்தைப் பார்த்த ஆடிட்டர் தரப்பு, ஓபிஎஸ்ஸைவிட எடப்பாடி பெட்டர் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அவர்கள் நினைப்பதை செயல்படுத்தும் முதல்வராக எடப்பாடி இருப்பார் எனவும் நம்புகின்றனர்.
எடப்பாடிக்கு எதிராக...
இதனால் சசிகலா குடும்பத்துக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துகிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், முதல்வருக்கு எதிராகப் பேசி வந்தனர்.
வாரிசு அரசியல்
இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, வாரிசு அரசியலை எதிர்க்கிறோம் என திவாகரனுக்கும் சேர்த்தே செக் வைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இறுதிவரையில் எதிர்த்த வாரிசு அரசியல் கோஷத்தை எடப்பாடி தரப்பினர் எழுப்பியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முழுக் காரணமே, அந்த ஆடிட்டரின் ஆலோசனைகள்தானாம்.
பம்மும் நடராசன்
இதே ஆடிட்டருக்கு எதிராக திவாகரனும் நடராசனும் கடுமையாகப் பேசியுள்ளனர். அவருக்கு எதுக்குய்யா போலீஸ் பாதுகாப்பு? என நடராசன் கொந்தளித்ததையும் யாரும் மறந்துவிடவில்லை. பா.ஜ.க தயவில் எடப்பாடி பழனிசாமி பலம் பொருந்தியவராக வலம் வருவதால், அவருடைய தயவில் செல்வதே சிறந்தது என்ற முடிவுக்கு நடராசன்கூட வந்துவிட்டாராம். அதனால்தான் எடப்பாடி ஆட்சிக்கு நற்சான்றிதழ் வாசிக்கிறார் நடராசன்.
பொதுச்செயலராகும் எடப்பாடி
ஆனால் எவ்வளவு புகழ் பாடினாலும் சசிகலா குடும்பத்துடன் நெருங்குவதற்கும் எடப்பாடி தயாராக இல்லை. சசிகலா கையில் உள்ள பொதுச் செயலாளர் பதவியை, தன் கைக்குக் கொண்டு வரும் வேலைகளில் அவர் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இதற்கு அந்த ஆடிட்டரும் உதவி வருகிறார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.