பொதுத்தேர்வு ரத்து.. பாதுகாக்கப்பட்ட டெல்டா.. முதல்வரின் அடுத்தடுத்த அறிவிப்புகள்.. என்ன பின்னணி?
சென்னை: தமிழக அரசு ஒரே வாரத்தில் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை ஆடிப்போக வைத்துள்ளது. பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்கிறார்கள்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்ற போது, அவர் எத்தனை நாட்கள் இந்த பொறுப்பில் இருப்பார் என்று கேள்விகள் எழுந்தது. பலரும் அதிமுக ஆட்சி மீது அப்போது நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் போக போக ஆட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் முதல்வர் பழனிசாமி.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல கொஞ்சம் அதிரடி காட்ட தொடங்கிய பழனிசாமி, தனது அமைச்சரவையில் கூட மாற்றம் கொண்டு வந்தார். அதோடு தனது ஆட்சிக்கு தடையாக இருந்த வழக்குகளை வெற்றி கொண்டார். ஆனாலும் முதல்வர் பழனிசாமியின் ஆட்சி நிறைய விமர்சனங்களை சந்தித்தது.

என்ன முக்கியம்
முக்கியமாக 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. மற்ற மாநிலங்கள், முக்கியமாக பாஜக ஆளும் மாநிலங்கள் இதற்கு ஓகே சொல்லும் முன்பே தமிழக அரசு இதற்கு தலையாட்டியது. தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இது பெரிய அளவில் எதிர்பலைகளை சம்பாதித்து.

தேர்வு அட்டவணை
இதற்கான தேர்வு அட்டவணையும் வெளியானது. இதற்கு எதிராக திமுக கட்சி போராட்டம் நடத்தியது. மாணவர்களின் கல்வி பாதிக்கும். பலர் பள்ளிக்கு செல்வதை நிறுத்துவார்கள். இது மிக மோசமான முடிவு, ஏழை மாணவர்களை இது மோசமாக பாதிக்கும் என்று பலர் கருத்து தெரிவித்தனர். இந்த பொதுத்தேர்வு முறைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கைவிட்டது
இதையடுத்து இந்த தேர்வை தமிழக அரசு கைவிட்டது. கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியானது. தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பழைய நடைமுறையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அரசு கூறியுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

காவிரி டெல்டா
இந்த நிலையில் இன்று அடுத்த அதிரடியாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் இன்று சேலத்தில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். இதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது, அங்கு விவசாயிகள் முன்னேற்றம் அடைய சட்டங்கள் கொண்டு வரப்படும், புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நலன்
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். முதல்வரின் அறிவிப்பை பொதுமக்கள் பலர் பெரிய அளவில் வரவேற்க தொடங்கி உள்ளனர்.

என்ன அறிவிப்பு
முதல்வரின் அறிவிப்பு பல்வேறு தரப்பில் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. ஒரே வாரத்தில் தமிழக அரசு இப்படியாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாக அதிமுகவினர் கருதுகிறார்கள். கட்சி, ஆட்சி இரண்டையும் அவர் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தேர்தலிலும் அதிமுக அதிரடியாக வென்றது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு இணையாக அதிக இடங்களை வென்றது.

அதிமுக குறி
இதனால் தற்போது 2021 சட்டசபை தேர்தலுக்கு அதிமுக குறி வைக்க தொடங்கி உள்ளது. அந்த தேர்தலில் அதிமுக - பாஜக - ரஜினி என்று மெகா கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது. அப்போது அதிமுக அதிக இடங்களில் போட்டியிடும் என்கிறார்கள். இதனால் அதிமுக இப்போதே முக்கியமான திட்டங்களை அறிவிக்கிறது என்று கூறுகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அறிவிப்புகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் பாஜகவிடம் பேரம் பேச இது உதவும் என்கிறார்கள்.

அடுத்த ஆசை
அதேபோல் இன்னொரு பக்கம் அதிமுகவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியை விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இல்லை. உள்ளாட்சி தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் மக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் செல்ல முதல்வர் பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். அதிரடி அறிவிப்புகளை வெளியிட காரணமாக இதுதான். தனக்கு நற்பெயர் கிட்டும் வகையில் இது போன்ற அறிவிப்புகளை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டு வருகிறார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications