ஆத்தீ! இவ்ளோ கோபமா? நிர்மலா சீதாராமன்-செங்கோட்டையன் சந்திப்பு கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியின் பதில்
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், அதிமுக தலைமையை மீறி சந்தித்து பேசியது குறித்த கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
தமிழக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழக சட்டசபையில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து பேசுவதற்கு அனுமதி கேட்டோம்; அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த மார்ச் 6-ந் தேதி முதல் 4 நாட்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் மத்திய அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த சோதனைக்கு எதிராக, டாஸ்மாக் நிறுவனம் வழக்குகளைத் தொடர்ந்தது. மேலும் மத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டனர். இதனால் மற்றொரு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அதை சந்திக்க திராணியில்லாமல் டாஸ்மாக் நிறுவனம், உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறது. அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகள், வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என டாஸ்மாக் கோரியிருக்கிறது.
இது தொடர்பாகவே சட்டசபையில் கேள்வி எழுப்பினோம்; இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சபாநாயகர் மற்றும் சபை முன்னவர் துரைமுருகனும், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் விவாதிக்க கூடாது என்றனர். அரசு தவறு செய்திருப்பதால்தான் வேறு மாநிலத்தில் விசாரிக்க சொல்கின்றனர்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகதான் துரோகம் செய்தது. இது நாட்டுக்கு தெரியும். ஸ்டாலின் அரசாங்கத்தில்தான் மாணவர்கள், மீனவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பனர் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர் அதிமுகவின் செங்கோட்டையன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது பற்றி கேள்வி கேட்ட போது, சார் இதுக்கும் அதுக்கும் என்ன தொடர்பு.. விடுங்க..இப்படி சந்திக்கிறது ஒரு பெரிய விஷயமாக ஊடகங்களில் காண்பிக்கிறீர்கள்.. வேறு வழியில்லை.. எதையாவது பேசி அதிமுகவை, எப்போதும் குறை சொல்கிற போக்கில்தான் இருக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications