தமிழகத்தில்.. தேர்தலுக்கு முதல் நாள் வரை 25 கோடி பணம் பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற ரூபாய் 25 கோடி பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.
இதுபற்றி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பறிமுதல் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.
ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கையைத் தடுப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பறக்கும்படை, கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
25 கோடி பறிமுதல்:
நேற்று காலை 6 மணிவரை, ரூபாய் 25 கோடியே 6 லட்சம் தொகையும், ரூபாய் 27.68 கோடி மதிப்புள்ள பொருட்களும் பிடிபட்டன. வீடு, வீடாகச் சென்று பணம் கொடுக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு 5 ஆயிரத்து 400 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டன.
பிடிபட்ட 111 பேர்:
இந்த நடவடிக்கையால் மட்டும் கடந்த 2 நாட்களில் ரூபாய் 55 லட்சத்து 19 ஆயிரம் பிடிபட்டது. பணப்பட்டுவாடா குற்றத்தில் 111 பேர் ஈடுபட்டனர். அவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டனர் என்று கூறியுள்ளார்.பறிமுதல் விவரங்கள் தொகுதி வாரியாக பட்டியல் இடப்பட்டுள்ளது.
தர்மபுரி:
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பென்னாகரத்தை அடுத்த மேற்குகள்ளிபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக மணிவண்ணன், கிருஷ்ணமூர்த்தி, வேல் உள்ளிட்ட 5 அதிமுக வினரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூபாய் 36 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது.
பையர் நத்தம்:
இதேதொகுதியில் பையர்நத்தம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பன்னீர்செல்வம், கோவிந்தன் உள்பட 4 பேரை பறக்கும்படை அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூபாய் 4 ஆயிரத்து 200 ஐ பறிமுதல் செய்தனர்.
நம்மாண்ட அள்ளி:
நம்மாண்ட அள்ளியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தையன், ஆனந்தன், லோகநாதன், சேட்டு, பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட நெமிலி ஒன்றிய தேமுதிக செயலாளராக இருப்பவர் வெங்கடரத்தினம். இவரது வீட்டின் அருகே பறக்கும்படை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து ரூபாய் 2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை மறுத்த வெங்கடரத்தினம் "இந்த பணம் என் மகன் நடத்தும் பெட்ரோல் பங்கில் விற்பனை மூலம் கிடைத்தது" என்றார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட உடுமலையை அடுத்த குடிமங்கலம் அடிவள்ளியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த சதீஷ் , ரமேஷ் ஆகிய 2 பேரை பறக்கும் படை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களது காரில் இருந்த ரூபாய் 70 ஆயிரத்தை கைப்பற்றினர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக குடிமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நீலகிரி:
நீலகிரி தொகுதி மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆவது வார்டில் கூடுதுறை மலை பகுதியில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
ஓட்டின் விலை 100 ரூபாய்:
இதனையடுத்து பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சாகுல்ஹமீது என்பவர் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூபாய் 100 மற்றும் ரூபாய் 200 வரை கொடுத்ததாக தெரியவந்தது.
வழக்கு பதிவு:
இதனையடுத்து பறக்கும் படையினர் சாகுல்ஹமீதிடம் இருந்த ரூபாய் 3,220 ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி ரத்தினசாமி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பட்டுவாடா செய்த சாகுல்ஹமீதை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர்:
அன்னூர் அருகேயுள்ள அ.மேட்டுப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் ஒவ்வொரு வீட்டுக்கும் சிலர் ஓட்டு ஒன்றுக்கு ரூபாய் 200 வீதம் வழங்கியதாகவும், பசூர், புதுப்பாளையம், கம்மாளதொட்டிபாளையம் உள்பட பல கிராமங்களில் ஆதிதிராவிடர் காலனியில் சிலர் வீட்டு கதவு வழியே பணம் போட்டதாகவும் பொதுமக்கள் கூறினார்கள். இதுகுறித்தும் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை:
நாகை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேதாராண்யம் பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது மரைஞாயநல்லூர் கிராமத்தில் உச்சக்கட்டளை பகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பன்னீர்செல்வம், செல்வராஜ், தங்கவேல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது மடக்கி பிடித்தனர். அப்போது பன்னீர்செல்வம் மட்டும் பிடிபட்டார். மற்ற 2 பேர் தப்பினர். தப்பி ஓடிய தங்கவேல் மீண்டும் அந்த பகுதியில் பணம் கொடுத்தபோது அதிகாரிகள் பிடித்தனர். அவரிடம் இருந்த ரூபாய் 3 ஆயிரத்து 400 ஐ பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி தொகுதிக்குட்பட்ட கரையாம்புத்தூர் நேருநகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கும்பலை பறக்கும்படையினர் பிடிக்க முயன்றனர். அப்போது அதில் துரை என்பவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பினர். பின்னர் அவரை அதிகாரிகள் ஜீப்பில் ஏற்றினர்.
தாக்கிய கும்பல்:
அப்போது ஒரு கும்பல் ஜீப் காரை வழிமறித்து அதிகாரிகளை தாக்கியது. படம் எடுத்த போலீஸ்காரரையும் அந்த கும்பல் தாக்கியது. இந்த சம்பவத்தின்போது ஜீப்பில் இருந்த துரை தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகளை தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
காரைக்கால்:
புதுச்சேரி தொகுதிக்குட்பட்ட காரைக்காலை அடுத்த ஊழியபத்து கிராமத்தில் தூதுபோனமூலை என்ற பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்திற்கு ஆதரவாக சிலர் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வாக்குச்சீட்டுடன் பணம் கொடுப்பதாக நிரவி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
31 ஆயிரம் பறிமுதல்:
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்ற போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அத்திப்படுகை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், கீழ்மனை கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூபாய் 31 ஆயிரத்து 600 ஐ பறிமுதல் செய்தனர்.