ஜெ.மெழுகு பொம்மை செய்ய என்ன செலவு ஆனது? தேர்தல் ஆணையம் விசாரணை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பயன்படுத்திய ஜெயலலிதாவின் மெழுகு பொம்மைக்கு என்ன செலவு செய்யப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பயன்படுத்திய ஜெயலலிதாவின் மெழுகு பொம்மைக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.
ஆர்.கே.நகருக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அதிமுகவின் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போட்டி போட்டு கொண்டு உழைத்தன.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் ஒரு படி மேலே போய் சவப்பெட்டி மாதிரியில் ஜெயலலிதாவின் மெழுகு பொம்மையை வைத்து வாக்கு சேகரித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில் அந்த மெழுகு பொம்மையை தயார் செய்தது யார்? அதற்கான பணத்தை கொடுத்தது யார்? இது வேட்பாளர் மதுசூதனன் கணக்கில் சேர்க்கப்படுமா? அல்லது கட்சிக்கணக்கில் சேர்க்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொம்மை செய்த நபரிடம் செலவின கணக்கு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சவப்பெட்டியுடன் அந்த பொம்மை செய்ய ரூ.6.5 லட்சம் செலவானதாக தெரிவித்தனர் இது யார் கணக்கில் சேர்க்கப்படும் என்று சந்தேகம் நிலவி வருகிறது. ஆனால் ரூ.6.5 லட்சத்துக்கு மேல் செலவாகியிருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.