இனயம் துறைமுகத்திற்கு எதிர்ப்பு... கடலில் பேரணியாகச் சென்ற 1500 மீனவர்கள்
குமரி: இனயம் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் கடல் வழியாக படகுகளில் சுமார் 1500 மீனவர்கள் பேரணி நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சி கொண்டது. பின்பு இது இனயம் பகுதிக்கு மாற்றப்பட்டது. ரூ. 27,500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டத்துக்கு எதிராக, குமரி மாவட்டத்தில் ஒருசாரார் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இனயம் வர்த்தக துறைமுகம் அமைந்தால் அதனால் கடற்கரை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப் படும் எனக்கூறி, அப்பகுதிகளில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 500 படகில் மீனவர்கள் இன்று பேரணியாகச் சென்றனர். இந்தப் பேரணியில் சுமார் 1500 மீனவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி செல்லும் மீனவர்களுக்கு ஆலயமணி அடித்து கடற்கரை கிராம மக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.