கேரளாவில் திமுக கூட்டணி குறித்து சோனியாவுடன் பேசவில்லை: ஈவிகேஎஸ் மறுப்பு
ஈரோடு: கேரளாவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைத் தான் சந்தித்து திமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கமளித்துள்ளார்.
கேரளாவின் வர்கலாவில் நாராயண குருவின் 83-வது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் கலந்து கொண்டார். அப்போது சோனியாவை அவர் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது.
அண்மையில் திமுக கூட்டணி குறித்து அழைப்புவிடுக்கும் போது காங்கிரஸை விலக்கி வைக்கமாட்டோம் என கருணாநிதி கூறியிருந்தார். இது குறித்து இருவரும் விவாதித்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தகவல்களை இளங்கோவன் மறுத்துள்ளார். இது குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் சோனியாவைத் தனியாக சந்திக்கவில்லை. அவர் கேரளா வந்திருக்கிறார் என்பது அறிந்து, நானும் அங்கிருந்தபடியால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
சோனியாவை வரவேற்ற கூட்டத்திலேயே நானும் நின்றிருந்தேன். மற்றபடி, சோனியாவைச் சந்தித்து கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் மட்டுமே முடிவு செய்யும்' எனத் தெரிவித்துள்ளார்.