இனியன் சம்பத் உள்ளிட்ட 11,967 பேருக்கும் ஒளிமயமான எதிர்காலம்- ஜெ. உறுதி
சென்னை: அதிமுகவை நம்பி வந்தவர்களின் நம்பிக்கை வீண் போகாது. அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்று கட்சியில் புதிதாக இணைந்த 11, 967 பேரிடம் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தம்பி இனியன் சம்பத், தே.மு.தி.க, தமாகா, காங்கிரஸ்,திமுக ஆகிய கட்சிகளில் இருந்தும் பலர் விலகி, அதிமுகவில் இன்று இணையும் நிகழ்ச்சி முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், சென்னை, ராயப்பேட்டை ஹேமமாலினி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பிற கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், தொண்டர்களும் என 11, 967 பேர் அதிமுகவில் இணைந்தனர். இதனை விழா போல கொண்டாடியது அதிமுக. செவ்வாய்கிழமை தினத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் ஜெயலலிதா, இன்று இணைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவில் பேசிய ஜெயலலிதா, திமுக, காங்கிரஸ், தமாகா, மதிமுக பல்வேறு கட்சிகள் மற்றும் பல அமைப்புகளில் இதுவரை பணியாற்றிய 11,967 பேர் அதிமுகவில் இணைந்துள்ளீர்கள். அதிமுக பொது செயலர் என்ற முறையில் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
ஜனநாயக இயக்கம்
அதிமுக, உண்மையான ஜனநாயகம் நிலவும் அரசியல் இயக்கம். நீங்கள் வந்த இடம் நல்ல இடம் எத்தகைய நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்துள்ளீர்களோ அந்த நம்பிக்கை ஒரு போதும் வீண்போகாது என தெரிவித்து கொள்கிறேன்.
வளமான தமிழகம்
அதிமுகவின் லட்சியம் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாத நிலை வேண்டும் என்பதாகும். வளமான தமிழகம் படைத்து எல்லாரும் பயன் பெற வேண்டும். நல்லாட்சி வழங்க நான் கடுமையாக உழைத்து வருகிறேன். இதனை உணர்ந்து என் தலைமையில் கட்சி பணியாற்ற வந்துள்ளீர்கள்.
ஒளிமயமான எதிர்காலம்
உங்கள் நம்பிக்கை வீண் போகாது. இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாக்கிட உழைக்கும் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் அரசியலில் ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று கூறினார்.
ஈவிகேஎஸ் இனியன் சம்பத்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய சகோதரர் இனியன் சம்பத். ஆரம்பத்தில் காங்கிரசில் இணைந்து பணியாற்றிய இவர் 1989ல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் கட்சியின் மாநில செயலாளராகவும் பதவி வகித்தார். 2011ல் தமிழ் தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
அதிமுகவில் ஐக்கியம்
கடந்த சில ஆண்டுகளுகு முன்பு தனது கட்சியை தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கட்சியுடன் இணைத்து கொண்டு பொதுச்செயலாளராக பதவி வகித்தார். மீண்டும் அக்கட்சியில் இருந்து இனியன் சம்பத்தும், இன்னொரு பொதுச் செயலாளர் ஜோசப் கென்னடியும் சேர்ந்து புதிய கட்சி தொடங்கினார். தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.