மோடி-ஜெ.சந்திப்பு பற்றிய கருத்தில் புண்படுத்தும், இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: இளங்கோவன் விளக்கம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு தொடர்பாக தாம் தெரிவித்த கருத்தில் எவரையும் புண்படுத்தும், இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னைக்கு வருகை தந்திருந்த பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டத்து இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகம் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார். பின்னர் ஜெயலலிதா வீட்டில் மோடிக்கு மதிய உணவு விருந்தளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்து ஆபாசமானதாக, விரசமானது என்று கூறி அ.தி.மு.க.வினர் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கையும் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கேள்வி எழுப்பிய ஜெயா டிவி செய்தியாளர் மாரியப்பனுக்கும் இளங்கோவனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டிருந்தது.
ஆதங்கத்தில் பேசியது..
இந்த நிலையில் சென்னையில் இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமது கருத்து தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்தித்து பேசியதில் பல்வேறு பிரச்சனைகளில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிற தமிழகத்துக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லையே என்ற ஆதங்கத்தில் நான் ஆற்றிய உரையில் கூறப்பட்ட எனது கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் சில கட்சித் தலைவர்களும் அறிக்கைகள் வெளியிட்டு உள்ளனர்.
சுயநலம்....
பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அக்கூட்டத்தில் தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டின் நலனை மனதில் கொள்ளாமல் சுயநல அரசியல் லாபத்தின் அடிப்படையில் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தேன்.
வேதனை தருகிறது..
ஆனால், அரசியல் ரீதியான எனது கருத்தைத் திரித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போராட்டம், எதிர்போராட்டம் என நடைபெறுவது எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.
இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை..
எனவே, சென்னையில் நடைபெற்ற மதுவிலக்கு ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கூறியது தனிப்பட்ட முறையில் எவரது மனதையும் புண்படுத்துவதோ, இழிவுபடுத்துவதோ எனது நோக்கமல்ல என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.