மதுவிலக்கு பற்றிய அறிவிப்பே இல்லையே... போராட்டம் தீவிரமடையும்.. ஜெ.வுக்கு இளங்கோவன் 'வார்னிங்'
சென்னை: சுதந்திர தின உரையில் மதுவிலக்கு பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிடாததற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மதுவிலக்குப் போராட்டம் இன்னமும் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் 69வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கி, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
மதுவிலக்கு தொடர்பாக சில அறிவிப்புகள் வரும் என்று தமிழகம் முழுவதும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் ஜெயலலிதா ஏதோ பென்சன் தொகை 500 ரூபாய், 250 ரூபாய் என்று உயர்த்தியதை மட்டும் அறிவித்துவிட்டு உருப்படியான திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை.
மதுவிலக்கு பற்றி எதையும் சொல்லவில்லை. ஆகவே மதுவிலக்கு வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்திலே இன்னும் தீவிரமாக நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.