ஜெ.விடுதலையை எதிர்த்து கர்நாடகா அப்பீல்... இளங்கோவன், கி.வீரமணி வரவேற்பு
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.....

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென கர்நாடக அரசு எடுத்திருக்கும் முடிவை வரவேற்கிறேன்.
மேல்முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் 20 நாட்களிலேயே மிக விரைவாக இந்த முடிவை எடுத்த கர்நாடக அரசை பாராட்டுகிறேன்.
விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் மூவருக்கு வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்திருக்கிறது.
இத்தகைய இரு வேறுபட்ட தீர்ப்புகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் தான் இறுதியாக நீதி கிடைக்கும். உச்சநீதிமன்றம் எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் தீர்ப்பை வழங்கும் என்று நம்புகிறோம்..
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதே போன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறியுள்ளதாவது.....
கர்நாடக மாநில அரசு சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மூவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா, கருநாடக மாநில அட்வகேட் ஜெனரலும், மூத்த வழக்குரைஞரும், சட்ட நிபுணருமான ரவிவர்மக் குமார், கருநாடக மாநில அரசு சட்டத்துறை செயலாளர் செங்கப்பா ஆகியோர் சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாக ஆய்ந்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கருநாடக மாநில அமைச்சரவை முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டது மாத்திரமல்ல - தவறான வகையில் வழக்குகளை மேற்கோள் காட்டி வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது சட்டப்படியானது - நியாயப்படியானது - வரவேற்கத்தக்கதுமாகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாடே எதிர்ப்பார்க்கிறது.
இவ்வாறு கீ.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications