கிடைக்காத முன் ஜாமீன்.... கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க இளங்கோவன் திடீர் டெல்லி பயணம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்காததால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்ற நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீரென புறப்பட்டு சென்றார். போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே அவர் டெல்லி சென்றதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் நடந்த பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார் இளங்கோவன். அவருக்கு எதிராக கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கொலை மிரட்டல் புகார்
இந்த களேபரங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான காமராஜர் அரங்க ஊழியர் வளர்மதி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். காமராஜர் அரங்க வணிக வளாகங்களின் வாடகை பணத்தில் பல லட்சம் ரூபாயை இளங்கோவன் மோசடி செய்ததாகவும் இது குறித்து புகார் அளித்ததால் தமக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார் என்பதும் வளர்மதியின் புகார்.
கைது பரபரப்பு
இந்த புகாரைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இப்புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி திங்களன்று தள்ளிவைத்தார்.
கைது செய்ய தடை விதிக்க முடியாது
அத்துடன் அவரை கைது செய்வதற்கு தடை எதுவும் விதித்து இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன் தெரிவித்துவிட்டார். இதனால் இளங்கோவன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.
திடீர் டெல்லி பயணம்
இதனிடையே நேற்று காலை ஈரோட்டில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேராக சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து இண்டிகோ விமானம் மூலம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். கைது நடவடிக்கைக்கு அஞ்சி அவர் திடீரென டெல்லிக்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.
போட்டுக் கொடுத்தது போட்டி கோஷ்டி?
அதே நேரத்தில் இளங்கோவன் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருப்பது குறித்து எதிர்கோஷ்டியினர் டெல்லி மேலிடத்துக்கு தகவல்களை அனுப்பி வைத்திருக்கின்றனர்; இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் அல்லது தமிழக பொறுப்பாளரான முகுல் வாஷ்னிக்கிடம் விளக்கம் அளிப்பதற்காக இளங்கோவன் டெல்லி சென்றுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.