திருநாவுக்கரசர் உண்ணாவிரதத்திற்கு வராமல் அப்பல்லோவில் காத்துக் கிடந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: திருச்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசைக் கண்டித்து மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இது காங்கிரஸ் கட்சியினரிடையே சலலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி பாயும் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். அவரே அவரது கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் போனது ஏன் என்ற கேள்வியை பலர் எழுப்பியுள்ளனர்.
ஆனால் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு திடீரென வந்திருந்தார் இளங்கோவன். திருச்சி போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க ஒரு காரணமாகவே அவர் திடீரென அப்பல்லோவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், விரைவில் அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதில் ப.சிதம்பரம், கிருஷ்ணசாமி, தங்கபாலு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், பெரும் திரளான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
கி.வீரமணி
தி.க தலைவர் கி.வீரணி வாழ்த்திப் பேசினார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, வசந்தகுமார் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன், விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இளங்கோவன் மட்டும் மிஸ்ஸிங்
ஆனால் முன்னாள் தலைவரான இளங்கோவன் மட்டும் இதில் காணப்படவில்லை. அவர் வரவில்லை. மாறாக சென்னையில் இருந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்தார்.
அப்பல்லோவில் காத்துக் கிடந்த இளங்கோவன்
இத்தனை நாட்களாக ஜெயலலிதாவைப் பார்க்க வராத இளங்கோவன் நேற்று காலை திடீரென அங்கு வந்தார். அங்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் சிறிது நேரம் வாசலில் காத்துக் கிடந்தார். பின்னர் உள்ளே போய் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார்.
புறக்கணித்தது நியாயமா
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநாவுக்கரசர் தலைவராக வந்தது முதலே கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கிறார் இளங்கோவன். திருநாவுக்கரசர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பாத அவர் அதற்குக் காரணம் காட்டவே அப்பல்லோவுக்கு போனதாக ஒரு தரப்பு புகார் கூறுகிறது.
காவிரி மைந்தன் இப்படிச் செய்யலாமா
காவிரி நீருடன் தொடர்புடையவர் இளங்கோவன். அவரே இப்படி வராமல் புறக்கணிக்கலாமா என்ற கேள்வியை விவசாயிகளும் எழுப்பியுள்ளனர். இளங்கோவன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது உணர்வைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர் வராமல் புறக்கணித்தது விவசாயிகளை வேதனையுறச் செய்துள்ளது.
குஷ்பு கூட வரவில்லை
அதேபோல இளங்கோவன் தலைவராக இருந்தபோது எப்போதும் கட்சிப் பணிகளிலும், போராட்டங்களிலும் ஆர்வத்துடன் முதல் ஆளாக வந்து நின்ற நடிகை குஷ்புவும் கூட இந்தப் போராட்டத்திற்கு வரவில்லை. அவரும் கூட இளங்கோவனைப் போலவே ஒதுங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.