கோர்ட்டும் கைவிரித்தது... மிரட்டல் புகாரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எந்த நேரத்திலும் கைது?
சென்னை: சென்னை காமராஜர் அரங்க ஊழியர் வளர்மதி கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என தெரிகிறது. வளர்மதியின் புகாரின் அடிப்படையில் தம்மை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கவும் முன்ஜாமீன் வழங்கவும் கோரிய இளங்கோவனின் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதனால் அவர் எந்த நிமிடமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி- முதல்வர் ஜெயலலிதா இடையேயான சந்திப்பை மிக மோசமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்ததாக கூறி அ.தி.மு.க.வினர் தொடர்ந்து 5வது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இளங்கோவன் மீது ஏற்கனவே அவதூறு வழக்கும் போடப்பட்டுள்ளது.
இந்த களேபரங்களுக்கு நடுவே தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான சென்னை காமராஜர் அரங்க ஊழியரான வளர்மதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், காமராஜர் அரங்கத்துக்கு சொந்தமான வணிக வளாகங்களின் வாடகை வசூலில் இளங்கோவன் பெரும் மோசடி செய்திருக்கிறார்; இது தொடர்பாக போலீசில் நான் புகார் கொடுத்ததால் என்னை அவர் மிரட்டினார் என்று வளர்மதி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை போலீசார் வளர்மதி கொடுத்த புகாரின் மீது விசாரணையை நடத்தத் தொடங்கினர். இதனால் தம்மை போலீஸ் கைது செய்யாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கவும் அவர் கோரியிருந்தார்.
இளங்கோவனின் முன்ஜாமீன் மனுவை அவசர மனுவாக நீதிபதி வைத்யநாதன் விசாரித்தார். அப்போது இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி வைத்யநாதன் தெரிவித்தார்.
ஆனால் இளங்கோவனை அதுவரை கைது செய்யாமல் இருக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார். இதனை நிராகரித்த நீதிபதி, இந்த முன் ஜாமீன் மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம் இளங்கோவனின் முன்ஜாமீன் மனு மீது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடிய நிலை இருக்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.