வாசனை ஓடுகாலி, நந்தி என்று விமர்சித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
அரியலூர்: கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை ஓடுகாலி, நந்தி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் திங்கட்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் காங்கிரஸின் கோட்டை என்பதை நிரூபிப்பது போன்று இங்கள் தொண்டர்கள் கூடியுள்ளீர்கள். காங்கிரஸ் கட்சியில் அனைத்து பதவிகளையும் நான் பார்த்துவிட்டேன். இனி நான் பதவிக்கு வர வேண்டும் எனில் அது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவி தான். ஆனால் என் உயரம் என்ன என்பது எனக்கு தெரியும்.
காங்கிரஸ் தலைமை அவமதித்துவிட்டதாக தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் வரும் 28ம் தேதி மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திக்க உள்ளனர். மூப்பனார் கட்சி துவங்கியபோது ஜெயலலிதா எதிர்ப்பு அலை இருந்தது. கருணாநிதியும், ரஜினியும் ஆதரவளித்தனர். அதனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பின் நடந்த தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைந்தது.
12 ஆண்டுகளாக பதவி சுகத்தை அனுப்பவித்துவிட்டு நான்கு மாதங்கள் ஆட்சியில் இல்லை என்றவுடன் ஓடும் நீங்கள் ஓடுகாலியை விட மோசமானவர்கள். பதவி சுகத்திற்காக ஓடுவது மிகப்பெரிய துரோகம் ஆகும். கட்சியில் தடையாக, நந்தியாக இருந்தவர்கள் சென்றுவிட்டனர்.
நீங்கள் மட்டும் செல்லாமல் இருந்திருந்தால் நான், தங்கபாலு, வசந்தகுமார் ஆகியோர் ஒரே மேடையில் அமர்வோமா? காங்கிரஸாரை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த வாசனுக்கு என் நன்றி.
மோடி பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டார். நாமோ மவுன சாமியார்களாக இருந்துவிட்டோம். மோடியின் ஆட்சி என்பது பணக்காரர்களின் ஆட்சி ஆகும். அவர் ஒரு மாயை திடீர் என்று வந்தது போன்று திடீர் என்று சென்றுவிடுவார். அவர் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார். ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலையே மோடிக்கும் ஏற்படும்.
மக்கள் தற்போது காங்கிரஸ் கட்சியை நினைக்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு காலத்தில் வெறும் 2 இடங்களை கைப்பற்றிய திமுகவும், 4 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவும் ஆட்சிக்கு வருகையில் காங்கிரஸால் ஏன் ஆட்சிக்கு வர முடியாது. நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications