தலைவர பார்க்கத்தானே வந்திருக்கேன்...பத்திரிக்கையார்களிடம் கடிந்த மு.க.அழகிரி!
திமுக கட்சிப் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தாம் கட்சியில் இல்லாத போது அது குறித்து கருத்து கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளன்று வருவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு ஒழுங்கு நடவடிக்கையாக திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக கடந்த 2014ம் ஆண்டு நீக்கப்பட்டார். அதற்கு பின்பு அவர் சட்டமன்ற தேர்தலின் போது கட்சியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 3 ஆண்டுகள் முடிந்தும் மு.க.அழகிரி கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மு.க.அழகிரி தனிக்கட்சித் தொடங்குவார் என்று கருதப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.
ஜெயலலிதா கருணாநிதி என்ற இரண்டு அரசியல் ஜாம்பவான்களும் களத்தில் இல்லாத நிலையில் அழகிரியும் அரசியல் பணியில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியை அவர் சந்தித்து சென்றார்.
அப்போது கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தான் கட்சியில் இல்லை என்றும் திமுக வளர்ச்சி பற்றி தான் எந்த கருத்தையும் கூற முடியாது என்று பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்தார். மேலும் ஜுன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்றும் சந்திக்க வருவதாகவும் கூறினார்.