திருட்டுத்தனமாக பட்டாசு தயாரித்த போது விபத்து- சிறுமி உள்பட 4 பேர் பலி
சாத்தூர்: விருதுநகர்: விருதுநகர் அருகே கள்ளத்தனமாக பட்டாசு தயாரித்த போது விபத்து ஏற்பட்டதில் சிறுமி உள்பட 4 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் அருகே உள்ள சங்கிலிபுரம் ஓண்டிபுலி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம், அய்யப்பன், மீனாட்சி சுந்தரம் விருதுநகர் ஊராட்சி ஓன்றிய 13வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஓண்டிபுலி கிராமத்தில் சுற்றிலும் கம்பவுண்ட் சுவர் எழுப்பி அதற்கு நடுவில் அனுமதியில்லாமல் பட்டாசு தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் மாலையிலும் பட்டாசுக்கு கருந்திரி தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்த பணியில் 20க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காற்று பலமாக வீசியுள்ளது. இதில் கருந்திரிகளுள் ஏற்பட்ட ஊராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்தது. தீ கருந்திரு தயாரிக்க தேவையான சல்பர், வெடிஉப்பு, கரித்தூசு, கெஸ்பின் பவுடர் ஆகியவை அதிகம் இருந்த பகுதிகளிலும் பரவியுள்ளது.
மூலப்பொருட்களில் தீ பரவியதும் அவை பயங்கர சத்ததுடன் வெடித்துச் சிதறின. இதில் கூடத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுவர்ச் கற்கள் வெடித்து நாலாபுறமும் சிதறின. அப்போது அங்கு அருகில் இருந்த பிடிகாலனியில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை நோக்கி கற்கள் பறந்து வந்து தாக்கின.
இதில் சின்ராஜ் மகள் காளீஸ்வரி, சந்தோஷம் மனைவி பொன்னம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பட்டாசு திரி தயாரிக்கும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த குண்பகோணத்தைச் சேர்ந்த தொழிலாளி அருமைதுரை, தீயில் கருகி இறந்தார்.
பிடி காலனியை சேர்ந்த முருகன், அசோக், சின்ராஜ், சீனிவாசனின் மனைவி சோலையம்மாள், சங்கர் வேல், துரைராஜ் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் விருதுநகர், கன்னியாகுமரி, சிவகாசி போன்ற ஊர்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ராமகிருஷ்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோகரன் தலைமயிலான வீரர்கள் சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு தனமாக பட்டாசு தயாரித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.