"என் உயிருக்கு ஆபத்து” - போலீஸ் கஸ்டடியில் ஒப்படைக்கப்பட்ட போலி டி.ஐ.ஜி நீதிபதியிடம் புகார்
கோவை: கோவையில் போலி டி.ஐ.ஜி.யிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் கோவை தொழில் அதிபர்கள் உள்பட 50 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கிய நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலி டி.ஐ.ஜி மாஜிஸ்திரேட்டிடம் புகார் கூறினார்.
சென்னை சாலி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகதுரை. இவர் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு நகை உற்பத்தி நிலையத்துக்கு சென்று தன்னை மத்திய புலனாய்வு பிரிவு ஊழல் தடுப்புத்துறை டி.ஐ.ஜி என்று கூறி சோதனை செய்தபோது, சரவணம்பட்டி போலீசார் அவரையும், அவருடைய கள்ளக்காதலி மீனாகுமாரியையும் கைது செய்தனர்.
கைதான சண்முகதுரையிடம் விசாரணை நடத்தியதில் அவர் தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த தொழில் அதிபர்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலி டி.ஐ.ஜி.யை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் காவல் நேற்று முடிந்ததை தொடர்ந்து சண்முகதுரையை போலீசார் நேற்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அதன்பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று கோவை சிறையில் அடைத்தனர். போலி டி.ஐ.ஜி.யிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
போலி டி.ஐ.ஜி. சண்முகதுரை வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் 50 பேரின் முகவரி மற்றும் அவர்களை பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த 50 பேரும் சண்முகதுரையிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களில் சிலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று போலி டி.ஐ.ஜி. சண்முகதுரை மோசடி செய்துள்ளார். கவர்னர் பதவி வாங்கி தருவதாக கூறி ஒரு தொழில் அதிபரிடம் அவர் பணம் பெற்று மோசடி செய்தார் என்று ஏற்கனவே கூறப்பட்டது.
தற்போது மேலும் ஒரு தொழில் அதிபரிடம் கவர்னர் பதவி வாங்கி தருவதாக கூறி சண்முகதுரை பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தவிர ஆந்திராவை தலைமையிடமாக கொண்ட பெரிய தொழில் அதிபர் ஒருவரிடம் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தருவதாக கூறி போலி டி.ஐ.ஜி. பணம் பெற்றுள்ளார். மேலும் மத்திய தேர்வாணையம் மற்றும் மாநில தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக கூறியும் பலரிடம் மோசடி செய்துள்ளார். போலி டி.ஐ.ஜி. சண்முகதுரையிடம் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள் சிலரும் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்துள்ளது.
எனவே போலி டி.ஐ.ஜி. சண்முகதுரையிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கவர்னர் பதவி வாங்கி தருமாறும், தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி வாங்கி தருமாறும், வங்கிகளில் கடன் வாங்கி தருமாறும் கூறி இதுவரை 50 பேர் முன்பணமாக கோடிக்கணக்கில் கொடுத்து ஏமாந்துள்ளனர். அந்த 50 பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் 50 பேரும் நேரில் வந்து அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் போலி டி.ஐ.ஜி. சண்முகதுரை பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சண்முகதுரையை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து போலி டி.ஐ.ஜி சண்முகதுரையிடம் விசாரணை நடத்துவதற்காக நகர குற்றத்தடுப்புபிரிவு போலீசார் அழைத்துச் சென்றனர்.