'தலைவா வா அரசியலுக்கு.. தொண்டர்கள் இருக்கிறோம்!' - நம்பி இறங்குவாரா ரஜினி?
தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதில்லை. ஒரு பக்கம் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம். இன்னொரு பக்கம், திமுக தலைவர் மு கருணாநிதி உடல் நலக் குறைவால் அவ்வளவாக செயல்பட முடியாத நிலையில் இருப்பது.
இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, இப்போதுள்ள தலைவர்கள் எவருமே தகுதியானவர்களாக, மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ரஜினியை தமிழகத்தின் அரசியல் தலைமை ஏற்க அழைக்கத் தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.
தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அவரை அரசியலுக்கு அழைக்கும் 8 ஷீட் போஸ்டர்கள் பளிச்சிட ஆரம்பித்துள்ளன.
"தலைமை ஏற்க மக்கள் அழைக்கிறார்கள்... தொண்டர்கள் இருக்கிறோம்" என்ற வாசகம் அதில் இடம் பெற்றுள்ளது. திருச்சியைச் சேர்ந்த ரஜினி மன்ற பொறுப்பாளர் ராயல் ராஜ் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
இந்தப் போஸ்டர்கள், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு குறித்து ராயல் ராஜ் கூறுகையில், "தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும். அனைத்து தரப்பினரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம். தமிழகத்தில் புரையோடிய நிலையில் இருக்கும் லஞ்சம், வன்முறையால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்சமும், வன்முறையும் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தே 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். விரைவில் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தலைவரைச் சந்திக்கப் போகிறோம். அப்போது அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்போம்," என்றார்.
இதனால் அரசியல் உலகில் மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
ரஜினியை இன்று நேற்றல்ல... கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகிறார்கள் ரசிகர்கள். ரஜினியின் தலைமையில் புதிய ஆட்சி மலர்வதற்கான தருணம் 1996-ல் வாய்த்தது. முதல்வர் பதவி தேடி வந்தும்கூட ரஜினி அதை ஏற்க மறுத்துவிட்டார். காரணம் அந்த வாய்ப்பு இன்னொரு கட்சியின் தயவில் கிடைத்தது. 'என் சொந்த பலம், சொந்தக் கட்சியின் செல்வாக்கு மூலம் மட்டுமே இத்தகைய பதவியை அடைய வேண்டும். இன்னொருவர் தயவில் வேண்டாம்' என்று கூறி ஒதுங்கினார் ரஜினி.
அதன் பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு அவருக்கு அமைந்தது, 2010-ல். ஆனால் இந்த முறை ரஜினியின் தயக்கம் அவரை அரசியலுக்கு வர விடாமல் தடுத்துவிட்டது.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்து ஏமாந்த பல ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் பார்வையாளர்கள் கடைசியில் அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது மீண்டும் ரஜினியின் அரசியல் பற்றிய பேச்சுகள் கிளம்பியுள்ளன. ரஜினிக்கான இடம் இப்போதும் அரசியலில் உள்ளதா? இனியும் ரஜினியால் அரசியலில் சாதிக்க முடியுமா? இப்போதுள்ள ரசிகர்களை நம்பி அவர் அரசியலில் குதிப்பாரா?