30 செ.மீ.. 50 செ.மீ. மழை.. சென்னைக்குத்தான் இது அபாயகரம்.. ஆனால் ஒரு விவசாயிக்கு?
காங்கிரீட் காடுகளாகிப் போன சென்னை நகரத்துக்கு 30 செ.மீ மழை பெருந்துயரம். ஆனால் இந்த மழையாவது கிடைக்குமா என்பதுதான் உள்மாவட்ட விவசாயிகளின் ஏக்கம்.
Recommended Video
திண்டுக்கல்: சென்னையில் 30 செ.மீ மழை.. இன்னும் 50 செ.மீ மழை பெய்யும் என்றெல்லாம் வரும் செய்திகள் சென்னைவாசிகளை பயங்கர பீதிக்குள்ளாக்குகிறது. ஆனால் திண்டுக்கல் போன்ற உள்மாவட்ட விவசாயிகள் பார்வையோ ஆகப் பெரும் ஏக்கமாகத்தான் இருக்கிறது என்பதே யதார்த்தம்.
140 ஆண்டுகாலத்துக்கு பிறகு மிக மோசமான வறட்சியை தமிழகம் கடந்த ஆண்டு எதிர்கொண்டது. கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல் போன்ற வறட்சி மாவட்டங்களில் நெல் சாகுபடி என்பதே மருந்துக்கு கூட இல்லாத பெரும் கொடுமை இருந்தது.
என்னதான் நிலத்தில் போட்டாலும் அத்தனையும் காய்ந்து கருகிப் போய் கும்பி வெடித்து குமுறுகிற நிலையில்தான் விவசாயிகள் இருந்தனர். கடந்த சில மாதங்களாக தலைகாட்டி வரும் மழைதான் இப்போதைக்கு மிகப் பெரும் ஆறுதலாக உள்மாவட்ட விவசாயிகளுக்கு இருந்து வருகிறது.
தலையெடுத்த விவசாயம்
அப்படி தலைகாட்டிய மழையால் போர்வெல்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் கிணறுகளில் இன்னமும் நீர் ஊறவே இல்லை. இந்த போர்வெல் நீரை வைத்துதான் மீண்டும் நெல் உள்ளிட்ட வேளாண் சாகுபடி தலையெடுத்திருக்கிறது.
பேரவலத்தில் பெருநகரங்கள்
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 30 செ.மீ மழை பெய்திருக்கிறது. இந்த 30 செ.மீ மழையை தாங்க முடியாத காங்கிரீட் காடுகளாகிப் போன பெருநகரங்கள் பேரவலத்தை எதிர்கொண்டுள்ளன.
30 செ.மீ போதாது
அதேநேரத்தில் இந்த 30 செ.மீ மழை பெய்தாலும் கூட திண்டுக்கல் போன்ற உள்மாவட்டங்களுக்கு திருப்தி தரக்கூடியதாக இருக்காது என்பதே விவசாயிகளின் கருத்து. பொதுவாக கிராமப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீ மழை அளவுக்கு பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.
ஓரளவுக்கு உதவும்
இப்போது சென்னையில் பெய்திருக்கும் 30 செ.மீ மழை என்பது அதிகபட்சம் 6 உழவு மழைதான் இப்பகுதி விவசாயிகளுக்கு.. இந்த 6 உழவு மழை பெய்திருந்தாலும் ஒரே ஒரு நன்மைதான் கிடைக்குமாம்..அதாவது பாழடைந்து போன கிணறுகளில் நீர் ஊற்று பிடிக்கும் அவ்வளவுதானாம்.. அந்த அளவுக்கு கிராமங்களின் மண் வறண்டுபோய் கிடக்கிறது.
கிடைக்குமா 30 செ.மீ. மழை?
அதேபோல் இங்கே ஏரிகள் எதுவுமே இல்லை. அத்தனையும் குளங்கள்தான். குளங்கள் களிமண்ணை கொண்டவை என்பதால் நீர் பூமிக்குள் இறங்காமல் குளங்கள் நிரம்பி வழியவும் வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒரு 6 உழவு மழை ஆண்டுக்கு ஒரு முறை வந்தால்கூட போதுமே என்பதுதான் உள்மாவட்ட விவசாயிகளின் ஏக்கம்.
இயற்கையே கருணை காட்டு!