ரஜினி என்னைக்குமே எம்ஜிஆர் ஆக முடியாது... விவசாயிகள், மீனவர்கள் சொல்றதும் வாஸ்தவமா தான் இருக்கு!
ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடினாலும், எங்கள் பிரச்னை பற்றி அவருக்குத் தெரியாது என்று மீனவர்களும், விவசாயிகளும் ஒதுக்கியே வைக்கின்றனர்.
நாகப்பட்டினம் : ரஜினியின் அரசியல் அறிவிப்பை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், தங்கள் பிரச்னை பற்றி அவருக்குத் தெரியாது என்று ஒதுக்கியே வைக்கின்றனர் காவிரி டெல்டா மாவட்ட மீனவர்களும், விவசாயிகளும்.
விவசாயிகள் மரணம், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் சம்பவத்தின் போதெல்லாம் ரஜினி எந்த கருத்தையும் கூறவில்லையே. அவர் மவுனத்தை மட்டுமே தான் இது வரை இந்த விஷயங்களில் பதிலாக வைத்துள்ளார் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கூறுகின்றனர். ஒரு வேளை ரஜினி முதல்வராக வந்தால் கூட அவர் எங்களுக்காக எதையும் செய்ய மாட்டார்.
ரஜினி 1996லேயே தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். அப்போது அவர் திமுக, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார். தற்போது அவர் ஒரு அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார், இதைத் தவிர வேறு எதுவும் புதிதாக நடக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எம்ஜிஆர் மீனவர்களின் தலைவர்
மீனவ சமுதாய மக்கள் எம்ஜிஆரை தங்களின் தலைவராக கருதினார்கள். தீவிர அரசியலுக்கு வரும் முன்னர் எம்ஜிஆர் மீனவர்கள் பிரச்னையில் அதிக அக்கறை காட்டினார். ஆனால் ரஜினி அப்படி எதையும் செய்யவில்லை, அவரால் மீனவ சமுதாய மக்களின் மனங்களை ஒருபோதும் வெல்ல முடியாது.
மவுனம் காத்த ரஜினி
1977ம் ஆண்டில் நாகப்பட்டினத்தை புயல் புரட்டிப் போட்ட போது உடனடியாக கீச்சாங்குப்பம் பகுதிக்கு வந்து எம்ஜிஆர் பார்வையிட்டார். அதோடு மீனவர்களின் துக்கத்திலும் பங்கேற்றார். ஆனால் ரஜினி இது வரை எங்களின் எந்த ஒரு துக்க சம்பவத்திலும் பங்கெடுத்ததில்லை.
மத்திய, மாநில அரசை ஏன் வலியுறுத்தவில்லை
எம்ஜிஆர் எங்களில் ஒருவராகவே இருந்தார். ரஜினியை எப்போதுமே அப்படி எங்களால் பார்க்க முடியாது என்றும் மீனவ சங்கத்தினர் கூறுகின்றனர். நதிகளை இணைக்க ரூ. 1 கோடி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார், ஆனால் அவர் இது வரை மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தவே இல்லை.
ரஜினி செயலில் காட்டுவார்
ஆனால் ரஜினி ரசிகர்களோ அவர் உறுதிமொழிகளைத் தரமாட்டார் அனைத்தையும் செயலில் காட்டுவார் என்று கூறுகின்றனர். ரஜினி மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பதால் அவர் எதைச் சொன்னாலும் அது சமுதாகத்தில் மிகப்பெரிய தாதக்கத்தை ஏற்படுத்தும். ரஜினி முழுநேர அரசியலில் ஈடுபட்ட பிறகு அனைத்தையும் வெளிப்படையாக பேசுவதோடு, பாட்டாளி மக்களுக்காக உழைப்பார் என்றும் ரசிகர் மன்றத்தினர் தெரிவிக்கின்றனர்.