அரக்கோணத்தில் பயங்கரம்.. ஐபிஎல் பார்க்க ரிமோட் கொடுக்காத தந்தையை அடித்து கொன்ற மகன்!
தந்தையை கொன்ற மகனை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
அரக்கோணம்: காவிரி விவகாரத்தில் தமிழகமே போர்க்களமாய் கொதித்து போய் உள்ள நிலையில், ஐபிஎல் போட்டியை பார்க்க விடாத பெற்ற தந்தையை மகன் ஒருவன் அடித்து கொன்ற சம்பவமும் அரக்கோணத்தில் நடந்தேறியிருக்கிறது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் சாய்நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் ஒரு கட்டிட கான்ட்ராக்டர். இவரது மகன் நந்தகுமார் 35, இவர் ஒரு மாற்றுத்திறனாளி. வேலைக்கு எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருப்பவர்.

இந்நிலையில் நேற்றிரவு அண்ணாமலை, வீட்டின் தரையில் பாய் விரித்து படுத்து, டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். அவரது மனைவியோ அச்சமயம் வெளியில் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில், வீடு திரும்பிய நந்தகுமார், "ராஜஸ்தானும் டெல்லியும் விளையாடி கொண்டிருக்கிறது, நான் ஐபிஎல் பார்க்க வேண்டும், சேனலை மாத்து" என அண்ணாமலையிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் அண்ணாமலையோ, "நான் தினமும் இந்த சீரியலை பார்த்துட்டு வர்றேன். இது முடிஞ்சதும் உனக்கு ரிமோட்டை தந்துடறேன்'' என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நந்தகுமாரோ விடுவதாக இல்லை. "இப்போ சேனலை மாத்தபோறியா இல்லையா?" என முரண்டு பிடிக்கவே, பேச்சுவார்த்தை இருவருக்கும் தகராறாக மாறியிருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் இரும்பு கம்பி ஒன்றை எடுத்து வந்து படுத்திருந்த அண்ணாமலையின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலை அய்யோ, அம்மா என அலறிக்கொண்டு வெளியே வந்து விழுந்தார். இதனால் பயந்துபோன நந்தகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அண்ணாமலையின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை மீட்டு அரக்காணம் மருதுதுவமனையில் அனுமதித்தனர். எனினும் அண்ணாமலை சிறிதுநேரத்திற்கெல்லாம் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணாமலையை அடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை பறிமுதல் செய்து, கொலையாளி நந்தகுமாரை வலைவீச தேட தொடங்கினர். அப்போது ரயில்நிலையம் அருகே ஒளிந்து கொண்டிருந்த நந்தகுமாரை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் அதிரடியாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், ஐபிஎல் பார்க்க முடியவில்லையே என மகனின் வேதனையை நினைத்து ஆத்திரப்படுவதா? அல்லது அதனால் பெற்ற தந்தையையே கொலை செய்ததை நினைத்து வருத்தப்படுவதா? என்ன சொல்ல?












Click it and Unblock the Notifications