மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம்... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழக மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 தினங்களுக்கு சென்னையில் மழை கொட்டியது.
இதுவரை 3 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகியது. இவற்றால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் தற்போது வங்கக் கடலில் 4-ஆவதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
எங்கே உள்ளது
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1160 கி.மீ தொலைவில் இது மையம் கொண்டுள்ளது.
மிதமான மழை
இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் ஆயக்குடியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பெய்துள்ளது. ஓகி புயல் குறித்து வானிலை மையத்துக்கு வந்த தகவல்களை அரசுக்கு உடனுக்குடன் அனுப்பி கொண்டுதான் இருந்தோம்.
கடலுக்குள் செல்ல வேண்டாம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8-ஆம் தேதி கரையை கடக்கும்போது காற்று பலமான வீசக்கூடும் என்பதால் தமிழக மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
ஏற்கனவே கோரிக்கை
ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேபோல் புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது