எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
சென்னை: ஆந்திர கடலோர எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் ராஜ்தரங் கப்பலில் தமிழக - ஆந்திர கடலோர எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடற்கரையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததை பார்த்தனர்.
இதையடுத்து அந்த படகை பறிமுதல் செய்த அதிகாரிகள், அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களையும் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால் கடல் சீற்றம் காரணமாக படகு சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்வதில் தாமதமானது.
இந்நிலையில் நேற்று காலை தமிழக கடலோர காவல் படையினர் கைது செய்த 5 இலங்கை மீனவர்களையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றிய படகையும் சென்னை துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து துறைமுக போலீசார், ஆந்திர கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்தனர்.