சென்னையில் பிச்சு உதறிய மழை... வெள்ளத்தில் தத்தளிப்பு
சென்னை : சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கிய அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்துக்கு பெரும் மழை கிடைக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், சென்னை நகரில் சிறிய மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை இருப்பதால் மழை என்பது சென்னை மக்களுக்கு வேதனையையும் கொடுக்கும்.

இன்று முதல் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.
மேலும் கடலூரில் விடிய விடிய கனமழை பெய்தது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னை அடையாறு, கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம்., ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி. மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தண்ணீரில் செல்லும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பழுதடைந்துவிடுவதால் அதை அகற்ற படாதபாடுபடுகின்றனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து விட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் பாம்பு, தேள் என விஷபூச்சிகள் வீட்டுக்குள் நுழைவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications