தென்பெண்ணையாற்றில் வெள்ளம்... பொது மக்கள் ஆற்றை கடக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் !
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன மழையின் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒசூர் வட்டாட்சியர் ரவிசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
கர்நாடகா மாநிலத்தில் தென் பெண்ணை ஆற்றின் நீர் படிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1900 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 43.3 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.2 அடி என்பதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 1750 கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே தென்பெண்ணையாற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் ஒசூர் அருகேயுள்ள தொரப்பள்ளி, பாத்தகோட்டா, உலகம், காமன்தொட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றை பொதுமக்கள் கடக்க கூடாது என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications