மதுரை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறை.. சிறைக்கு நேரில் சென்று நீதிபதி ஆய்வு
சூழலியலாளர் முகிலனின் வழக்கில் மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேசன் சிறைக்கு சென்று ஆய்வு செய்தார்.
மதுரை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வரலாற்றிலேயே முதல் முறையாக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மனுமீது விசாரணை நடத்த மதுரை மத்திய சிறைக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.
அணு உலை எதிர்ப்பாளரும் சூழலியல் செயல்பாட்டாளருமான முகிலன் கடந்த 335 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்துவருகிறார். இதில் முகிலன் பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மதுரை மத்திய சிறையில்தான் இருந்து வருகிறார்.
மதுரை சிறையில் முகிலன் கொசுக்கள் நிறைந்த சுகாதாரமற்ற தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட முகிலனுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளை சுட்டிக்காட்டி திருச்சி வழக்கறிஞர் கென்னடி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தர்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு வந்தது.அப்போது முகிலன் சார்பாக வழக்கறிஞர் அழகுமணி நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.
வழக்கறிஞர் அழகுமணி வாதிடுகையில், முகிலன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை நடக்கிறது. சிறையில் மனித உரிமை மீறப்படுகிறது என வாதிட்டார். மேலும், ஒரு தலைமை குற்றவியல் நடுவர் ஒருவர் முகிலன் மீதான தனிமை சிறை சித்ரவதைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேசன், தானே சிறைக்கு சென்று ஆய்வு செய்வதாக கூறினார். அதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை நீதிபதி சுந்தரேசன் சிறைக்கு சென்று முகிலனை விசாரித்தார்.
இதுதான் உயர்நீதிமன்ற மதுரை கிளை வரலாற்றிலேயே ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி நேரடியாக சிறைக்கு சென்று ஆய்வு நடத்தியது.
மதுரை சிறைக்கு சென்ற நீதிபதி சுந்தரேசன் முகிலனின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். பின்னர் சிறையை சுமார் 25 நிமிடங்கள் ஆய்வு செய்தார். அப்போது, முகிலனும் தனது குறைகளையும் தன் மீதான சித்ரவதைகளையும் எழுத்துப் பூர்வமாக நீதிபதி அவர்களிடம் அளித்தார்.
முகிலன் தன்னுடைய கோரிக்கையில் தனக்காக மட்டுமில்லாமல் சிறை கைதிகள் அனைவருக்குமாக பத்து கோரிக்கைகளை வைத்துள்ளார். அந்த பத்து கோரிக்கைகள் பின்வருமாறு:
1. மதுரை மத்திய சிறையில் தற்போது சுமார் 3 மணி நேரமே மருத்துவர்கள் உள்ளனர். அதனால், முழு நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும்.
2. சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் தூங்குவதற்காக வெறும் ஊசி, மருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது. அவர்களின் மனநல குறைபாட்டை சரி செய்ய போதிய மருத்துவ வசதி வேண்டும்.
3. சிறையில் அனைத்து கழிவறைகளிலும் தண்ணீர் செல்லும் வகையில் சரி செய்ய வேண்டும். கழிப்பறை தொட்டிகள் உரிய முறையில் மூடப்பட வேண்டும். கழிவறைகள் அனைத்தும் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட வேண்டும்.
4. மதுரை நீதிமன்றத்திற்கு உட்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை லோக் அதாலத் நடைபெறுகிறது, அதை 2 மாதத்திற்கு ஒருமுறை அனைத்து குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரணை சிறைவாசிகளுக்கு லோக் அதாலத் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
5. மத்திய சிறைகளில் மாவட்ட ஆட்சி தலைவர், சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவ துறை அதிகாரிகள் முறையான கால இடைவெளியில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
6. சிறைவாசிகளுக்கு அறிவொளி இயக்கம் போல் கல்வியறிவு பெற வசதி செய்ய வேண்டும்.
7. சிறைவாசிகள் ஒவ்வொருவருக்கும் சிறையில் வழங்கப்படும் வசதிகள், உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கும் படி ஏற்பாடு செய்ய வேண்டும்.
8. சிறையில் தொலைபேசி பேசுவதற்கு ரூ.45 கட்டிய தேதியில் இருந்து ஒரு மாதம் பேச ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது அவ்வாறு இல்லாமல் உள்ளது.
9. சிறையில் உள்ள தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் தமிழில் பொதிகை தெரியும் படி ஏற்பாடு செய்ய வேண்டும். 3 மணி நேரம் மட்டுமே தமிழில் தெரிகிறது, மற்ற நேரங்களில் இந்தி மட்டுமே ஒளிப்பரப்பப்படுகிறது. இது இந்தி திணிப்பாகும்.
10. சிறையில் வழங்கப்படும் உணவுகள் தரம் மற்றும் அளவு முறையாக இல்லை. இதை சிறை விதிப்படி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
என முகிலன் 10 கோரிக்கைகளை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.