தமிழகத்தில் பல இடங்களில் கனமழை..அரியலூரில் இடிதாக்கி பெண் பலி..புதுக்கோட்டையில் 5 பெண்கள் காயம்
திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
திருச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரியலூரில் இடி தாக்கியதில் பெண் ஒருவர் பலியாகினார். புதுக்கோட்டையில் இடிமின்னல் தாக்கியதில் 5 பெண்கள் காயமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டி வருகிறது. திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கன மழை பெய்து வருகிறது.
திருச்சி, மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டி வருகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் ராணிப்பேட்டை முதல் திருப்பத்தூர் வரை பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 30 வீடுகள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது. வெப்பம் தணிந்துள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறை காற்று இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சூறைகாற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து மின்சார கம்பிகளின் மீது விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் லேசான கனமழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பலத்த மழை பெய்தது. அப்போது இடி மின்னல் தாக்கியதில் 5 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்த 5 பெண்கள் இலுப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல், ஈரோட்டில் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டம் சிறுதம்பூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் அஞ்சலை என்ற மூதாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.