முன்னாள் அமைச்சர் துரைராஜ் காலமானார்
சேடபட்டி அருகே பெருங்காம நல்லூரைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர், அ.தி.மு.க., கிளைச் செயலாளராக கட்சிப் பணியை துவக்கினார். அவ்வூர் தொடக்க விவசாய கூட்டுறவு தலைவர், 1986ல் சேடபட்டி ஒன்றிய தலைவர், ஒன்றிய செயலாளர், 1995ல் மாவட்ட கவுன்சிலர், 1999 ல் மாவட்ட செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தவர்.
2001, 2006 ல் சேடபட்டி தொகுதியில் (தொகுதி மறு சீரமைப்பில் தற்போது இத்தொகுதி நீக்கப்பட்டு விட்டது) போட்டியிட்டு, இருமுறை முறை எம்.எல்.ஏ.,வானார்.
2001 அதிமுக ஆட்சி காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது பேரையூரில் நடந்த, குழந்தைகளை உயிரோடு புதைத்து எடுக்கும் பூக்குழி மாரியம்மன் கோயில் குழிமாற்று திருவிழாவில் கலந்து கொண்டதற்காக, பதவியை இழந்தார்.
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் அதிமுகவில் புறநகர் மாவட்ட அவைத் தலைவராக இருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துரைராஜ் உசிலம்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு மனைவி நாகராணி, மகன்கள் தனராஜன், ரமேஷ்வரன், லட்சபிரபு உள்ளனர்.