பா.ம.க. முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் அ.தி.மு.க.வில் இணைந்தார்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சமீபகாலமாக, பா.ம.க., தலைமையுடன் ஏற்பட்ட, கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருந்தார் ராமதாஸ், கடந்த மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இச்சூழ்நிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் ராமதாஸ்.
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2004-ல் நடைபெற்ற லோக்சபா பொதுத்தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பணியாற்றிய மு.ராமதாஸ், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
அப்போது புதுச்சேரி மாநில அ.தி.மு.க. பொறுப்பாளர் பெ. புருஷோத்தமன், எம்.எல்.ஏ., உடன் இருந்தார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நிர்வாகத்திறன்
அதிமுகவில் இணைந்தது குறித்து கூறிய ராமதாஸ், முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன், என்னை ஈர்த்தது. நாட்டை வழிநடத்தும் திறன் கொண்டவராக திகழ்கிறார். தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருகிறார். இதுபோன்ற ஆட்சி புதுச்சேரியில் அமைய வேண்டும். அதற்காக அவரது முன்னிலையில் கட்சியில் இணைந்தேன். புதுச்சேரியில் 2016ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபடுவேன். பா.ம.க.,வில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே விலகி விட்டேன். அதன்பின் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். தற்போது அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன் என்றார்.