அம்பாசமுத்திரத்தில் வீடுகளில் திருடிய கல்லூரி மாணவர்கள் கைது- காவலர் ஒருவர் காயம்
அம்பாசமுத்திரத்தில் வீடுகளில் திருடிய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே சோழவந்தானில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருடர்கள் தாக்கியதில் காவலர் காயம் அடைந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் 5வது வார்டு சோலைபுரம் பகுதியில் ஜவுளி கடை உரிமையாளர் முபாரக்கனி. இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மதுரை சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தனர்.
அப்போது அம்பை காவல்துறையினர் ரோந்து வந்தபோது, திருடர்கள் இருப்பதை அறிந்து வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஏட்டு ராமர் என்பவரை திருடர்கள் அரிவாளால் தாக்கினர். அவர் திருப்பி தாக்கியதில் திருடர்களில் ஒருவர் காயமடைந்தான். இதில் இருவர் பலத்த காயங்களுடன் அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருடர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான நபர்களின் பெயர்கள் லிவின், வினோத், மணிசுந்தரராஜ், ராபின்சன் என்பதாகும். இவர்கள் தேக்கடி, கம்பம்,மாஞ்சோலை நாலு முக்கு, கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். பொன்மாநகர் காலனியில் குகன் என்பவர் வீட்டில் தங்கி படித்துக்கொண்டே திருட்டுத்தொழிலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.