மோசடி வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 4 பேருக்கு சிறை: சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
சென்னை: மோசடி வழக்கில் கனரா வங்கி மேலாளர் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கனரா வங்கி கிளையில் தலைமை மேலாளராக வேலை செய்தவர் டி.ஆர்.நாயக். இவர், ஆனந்தராஜ் ஸ்டீபன், சாமுவேல் டோனி, வசந்தன் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து, வேறு ஒருவருடைய வைப்பு நிதி ஆவணங்களை மோசடி செய்து, வங்கி நிர்வாகத்தை ஏமாற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கி தலைமை மேலாளர் டி.ஆர்.நாயக் உள்பட 4 பேர் சேர்ந்து வங்கியை ஏமாற்ற முயன்றது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாயக்கிற்கு, 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், ஆனந்த்ராஜ் ஸ்டீபனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும், சாமுவேல் டோனிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.25 லட்சம் அபராதமும், வசந்தனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கிறேன் என்று தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications