இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது... மேலும் 4 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்ற சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்கடந்த 29-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, திங்கள் கிழமை முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடலுக்கு சென்ற முதல் நாளே ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 293 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 211 விசைப்பட குகளிலும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்களில் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த தியாகு, மணி, பாலா, சந்திரன் ஆகிய நான்கு பேரும் நெடுந்தீவு பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களையும், அவர்களது படகையும் சிறை பிடித்தனர். பின்னர் 4 மீனவர்களையும் இலங்கையிலஉள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது தொடர் கதையாகிவருகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவே பயமாக உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.