”தெருவில் சுற்றும் நாய்களுக்கு வைத்தியம் பார்க்க மொபைல் ஹாஸ்பிட்டல்”
சென்னை: வீதியில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்காக நடமாடும் இலவச கால்நடை மருத்துவமனை சென்னையில் செயல்பட்டு வருகிறது.
தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படுகிறது.
இந்த நடமாடும் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர். சுமதி கூறுகையில், "இந்த அமைப்பு மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. எங்கள் அமைப்பின் செயல் அலுவலர் திரு. உமாராணி அவர்களின் மேற்பார்வையில் இந்த நடமாடும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
எங்களின் முதல் நோக்கமே ஆதரவற்று தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள், ஆடு, மாடு, கோழி, மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், பறவைகள் என எல்லா விலங்குகளுக்கும் மருத்துவம் பார்ப்பது தான்.
எந்த பகுதிகளில், அதிகமாக பிராணிகள் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் மருந்துகள் உயர் தரமானவை. காய்ச்சல், ராபீஸ், மற்றும் ஆடு, மாடுகளை தாக்கும், கோமாரி, உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், மடி நோய், கிருமி தொற்று நோய்கள் போன்றவற்றுக்கு முறையாக மருத்துவம் செய்யப்படுகிறது. வாரத்தில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு பகுதிகளுக்கு சென்று முதலுதவி செய்கின்றோம்" என்று தெரிவித்தார்.