மார்ச் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் நோ சினிமா ரிலீஸ்... திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
மார்ச 1 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் எந்த திரைப்படமும் வெளியாகாது என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: மார்ச் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் எந்த திரைப்படமும் வெளியாகாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எந்த மொழி சினிமாக்களாக இருந்தாலும் அவை டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு பின்னர் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதற்கு தயாரிப்பாளர்கள் சில கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால் டிஜிட்டல் சேவை வழங்குவோர் கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பதாக தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் பயனில்லை.
எனவே மார்ச் 1-ஆம் தேதி முதல் எந்த திரைப்படம் தமிழகத்தில் வெளியாகாது என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் கேட்டு கொண்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராக தென்னிந்திய திரையுலகினை சார்ந்த தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச் 1-ஆம் தேதி முதல் எங்களின் இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளோம்.
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சினை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராக தமிழ்த் திரையுலகமும் மேற்கண்ட மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த டிஜிட்டல் சேவைக்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.
எனவே தொடர்ந்து அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நமது தமிழ்த் திரையுலகமானது மிகமிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு இன்று தயாரிப்பாளர்களின் நிலை ஒரு கேள்விக்குறியாகிவிட்டதை நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலை மாற நமது நியாயமான பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேறும் பொருட்டு வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படத்தினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.